இந்தியாவின் முதல் இரவு நேர வந்தே பாரத் ரயில் இன்று துவக்கம்! சென்னை- பெங்களூரு மக்கள் ஹேப்பி
இந்தியாவின் முதல் இரவு நேர வந்தே பாரத் ரயில் சேவை சென்னை-பெங்களூர் நகரங்களுக்கு இடையே துவங்கி உள்ளது. இதை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு சோதனை முயற்சியாக செய்துள்ளது. சென்னை பெங்களூரு இடையே இந்த ரயில் சேவை இன்று துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமான பின்பு பல முக்கிய நகரங்களை இணைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ரயில் மற்ற ரயிலை விட அதிக வேகத்தில் அதே நேரம் அதிக சொகுசாம்சங்களுடன் பயணிக்கும் ரயிலாக இருப்பதால் இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால் இதுவரை வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் பெரும்பாலும் பகல் நேர ரயிலாக உள்ளன. இதனால் அமரும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இரவு நேரத்தில் பயணிக்கும் வகையிலான வந்தே பாரத் ரயில் இதுவரை தயாரிக்கப்படாததால் இரவு நேரம் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது.
ஆனால் தற்போது பண்டிகை கால கூட்ட நெருக்கடி அதிகமாக இருப்பதால் இரவு நேரத்திலும் வந்தே பாரத் போன்ற ரயில்களில் சேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருந்ததால் பகல் நேர அமரும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையே இரவு நேரத்திலும் தற்காலிகமாக இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. சென்னை முதல் பெங்களூர் வரை இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

இதன்படி நேற்று அதாவது நவம்பர் 20ம் தேதி மாலை 5:15 மணிக்கு பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயில் சரியாக இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. இதில் ஏராளமான பயணிகள் வந்தனர்.
இதே ரயில் இன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி அதிகாலை 4:30 மணிக்கு பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையத்திற்கு சென்று சேர உள்ளது. இந்த ரயில் மொத்தம் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலாக இயக்கப்படுகிறது.

தற்போது இந்தியா முழுவதும் 34 ரூட்டுகளில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தெற்கு ரயில்வே இரவு நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவதன் மூலம் பயணிகளின் வரவேற்பு அந்த ரயிலுக்கு எப்படி இருக்கிறது என்பதை சோதிக்க முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை தீபாவளி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்து அடுத்து வரும் விடுமுறை நாட்களில் இப்படியான வந்தே பாரத் ரயிலை சிறப்பு ரயில்களாக இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-பெங்களூர் இடையே தற்போது ஏராளமான ரயில்கள் இருந்தாலும் அத்தனை ரயில்களும் கூட்டம் நிரம்பி வழியும் வகையில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை-பெங்களூர் இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்கள், இரண்டு சதாப்தி ரயில்கள், ஒரு டபுள் டக்கர் ரயில் மற்றும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினசரி சேவையை வழங்கி வருகின்றன. இதில் தொழில் ரீதியாக பயணிக்கும் பலர் சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் சென்னையிலிருந்து மைசூர் வரை செல்லும் ரயிலாகும் இடையில் பெங்களூரு வழியாக செல்கிறது.
அதேநேரம் இந்திய ரயில்வே நிர்வாகம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்கி வருகிறது. சென்னையைப் ஆலையில் இந்த ரயில் பெட்டிகள் எல்லாம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ரயில்கள் அறிமுகம் ஆகும்போது படுக்கை வசதியுடன் கூடிய இரவு நேரம் வந்தே பாரத் ரயில்கள் முழு நேர ரயிலாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது பண்டிகை காலம் என்பதால் பலர் அதிகமான பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தை சமாளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. மக்கள் பலரின் தேவையை இந்த வந்தே பாரத் ரயில் பூர்த்தி செய்யும். இரவு நேர வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வரும்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு அந்த ரயிலுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









