சென்னை நிறுவனம் உருவாக்கிய கலப்பின பறக்கும் கார்... இந்தியாவின் முதல் பறக்கும் கார்... அடுத்த மாசம் அறிமுகம்!
சென்னையை விநாடா ஏரோமொபிளிட்டி நிறுவனம் இந்தியாவின் முதல் பறக்கும் கலப்பின காரை உருவாக்கி இருக்கின்றது. இக்காரை அடுத்த மாதம் லண்டனில் நடைபெற இருக்கும் விமான காண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழகத்தின் தலைநகர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் விநாடா ஏரோமொபிலிட்டி ( Vinata Aeromobility). இந்நிறுவனம் இந்தியாவின் முதல் ஹைபிரிட் (கலப்பின) பறக்கும் காரை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவின் முதல் கலப்பின பறக்கும் கார் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் முதல் பறக்கும் காரும் இதுவே ஆகும்.

இதனை அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலகின் மிக முக்கியமான விமான கண்காட்சியான எக்செல்லில் வெளியீடு செய்ய விநாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆகையால், ஆசியாவின் முதல் கலப்பின ஹைபிரிட் கார் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை நேற்றைய (செப்டம்பர் 20) தினம் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா ஸ்கின்டியா அவரின் டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடியும் அவரது டுவிட்டர் இதுகுறித்த தகவலை பகிர்ந்து, விநாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

விநாடா ஹைபிரிட் பறக்கும் காரில் டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் வசதிக் கொண்ட பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை செயற்கை நுண்ணறிவு கொண்டதும்கூட. ஆகையால், இதில் பயணிக்கும்போது முற்றிலும் புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

தொடர்ந்து, சொகுசு கார்களுக்கு இணையான சிறப்பு வசதிகளும் இடம் பெறும் என தகவல்கல் வெளியாகியுள்ளன. இத்துடன், ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் சிலவும் இந்த பறக்கும் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காரில் பனோரமிக் ஜன்னல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 300 டிகிரி பார்வையை வழங்கும் விதமாக இது உள்ளது.

ஹைபிரிட் பறக்கும் கார் 1100 கிலோ எடைக் கொண்டது. இது 1300 கிலோ எடை வரையில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மேலும், இது செங்குத்தாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் வசதியைப் பெற்றிருக்கின்றது. இதற்காக கோ-ஆக்சியல் குவாட் ரோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மணிக்கு 100 கிமீ தொடங்கி 120 கிமீ வேகத்தில் பறக்கும் திறனை விநாடா ஏரோமொபிலிட்டி இப்பறக்கும் ஹைபிரிட் காருக்கு வழங்கியிருக்கின்றது. உச்சபட்சமாக 3,000 அடி உயரம் வரை பறக்கும் திறனை இது கொண்டிருக்கின்றது. இந்த பறக்கும் காரை உயிரி எரிபொருளை பயன்படுத்தும் வகையில் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.
சிறு துளியளவும் இப்பறக்கும் காரில் தவறுகள் ஏற்படாது என நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. இதற்காக பலதரப்பட்ட மின் மோட்டார்கள் மற்றும் உந்து விசை எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், ஒன்று தோல்வியுற்றால் மற்றொன்று என பயணிகளை பாதுகாப்பாக இலைக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஒரு வேலை சக்தியில் (power) ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் ஜெனரேட்டர்கள் வாயிலாக மின்திறன் மீட்டமைக்கப்பட்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு தேவையான மின்சாரம் வழங்கப்படும். இந்த ஜெனரேட்டரே உயிரி எரிபொருளால் இயங்கக் கூடியதாக இருக்கின்றது. இதுபோதாதென முழுமையாக வெளியேறும் பாராசூட் மற்றும் ஏர்பேக் வசதிகள் இப்பறக்கும் காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஆகையால், பாதுகாப்பிற்கு பல மடங்கு உத்தரவாதம் கிடைக்கும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








