சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் துவங்குகிறது... நம்ப முடியாத பயண நேரம்!
சென்னை - பெங்களூர் இடையில் புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த சாலை மூலமாக, சென்னை - பெங்களூர் இடையிலான பயண நேரம் சில மணிநேரமாக குறைய இருக்கிறது.

தென் இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப நகரங்களாக விளங்கும் சென்னை மற்றும் பெங்களூர் இணைப்பதற்கு சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. சரக்குப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என இரண்டிலும் இந்த இரு நகரங்களும் மிக நெருக்கமான தொடர்பை பெற்றிருக்கின்றன. சாலை, ரயில், ஆகாய மார்க்கமாக இந்த இரு நகரங்களும் சிறப்பான இணைப்பை பெற்றுள்ளன.

இருந்தாலும், சாலை மார்க்கமாக தற்போது பயன்பாட்டில் பூந்தமல்லி, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லும் பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 அதிக வாகனப் போக்குவரத்தால் திணறி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு பல சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துக்களுக்கும் வழிகோலுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், புதிய விரைவு நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், நெடுஞ்சாலைகளை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இதனால் அதிர்ந்து போன நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தாமதமாகும் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு முழு முனைப்புடன் களமிறங்கி உள்ளனர். அதன்படி, சென்னை - பெங்களூர் இடையிலான விரைவு நெடுஞ்சாலை திட்டத்தை அதிகாரிகள் விரைந்து முடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் சாவையாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இந்த விரைவு சாலை திட்டம் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு டென்டர் கொடுக்கப்பட உள்ளது. கர்நாடகம், ஆந்திராவில் தலா 3 பகுதிகளாகவும், தமிழகத்தில் 4 பகுதிகளாகவும் பணிகள் நடைபெற உள்ளன.

மொத்தம் 17,000 கோடி மதிப்பீட்டில் 263 கிமீ தூரத்திற்கு இந்த புதிய விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன், வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த சாலை திட்டப் பணிகளை நிறைவு செய்வதற்கும் நெடுஞ்சாலை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சாலை திட்டம் நிறைவு பெற்றால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் இரண்டரை மணிநேரத்தில் சென்றுவிட முடியும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Photo Credit - Wiki Commons

தற்போது பயன்பாட்டில் உள்ள சென்னை, பூந்தமல்லி, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலைக்கும், ராணிப்பேட்டை, சித்தூர் வழியாக பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலைக்கும் இடையில் இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில், பல பகுதிகள் சித்தூர் வழித்தடத்தை ஒட்டி அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








