2.5 மணிநேரம் படம் முடிவதற்குள் சென்னை டூ பெங்களூர்... எக்ஸ்பிரஸ்வே எந்த கட்டத்தில் இருக்கு?
இந்தியாவில் சாலை போக்குவரத்தை வேகப்படுத்த மத்திய அரசு முடிந்த வரையில் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, விரைவுச்சாலைகள் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லி - மும்பை இடையே அமைக்கப்பட்ட விரைவுச்சாலை ஆனது இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோன்று, தென்னிந்தியாவில் பெங்களூர்- சென்னை இடையே புதிய விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே குறித்த புதிய அப்டேட்டை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை பயணங்களை விரைவுப்படுத்த இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் புதியதாக விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்னிந்தியாவின் இரு முக்கியமான மாநகரங்களான சென்னை மற்றும் பெங்களூர் இடையே அமைக்கப்பட்டு வரும் விரைவுச்சாலையிலும் மத்திய நெடுஞ்சாலை துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

வருட கணக்கில் அமைக்கப்பட்டு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை ஆனது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த ஆண்டிற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம். இதுகுறித்து மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை இந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் நடைபெற்ற பாஜக கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதிய விரைவுச்சாலையினால் பெங்களூர் மற்றும் சென்னை இடையேயான பயண நேரம் வெறும் 2 மணிநேரமாக குறையும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் வருடக்கணக்கில் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலை பணிகளால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்படுவதாக 2022ஆம் ஆண்டில் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் தெரிவித்து இருந்தோம். ஆனால் இன்னமும் இந்த விரைவுச்சாலை திறக்கப்படவில்லை. 4-வழி நெடுஞ்சாலையாக ஏறக்குறைய 258கிமீ தொலைவிற்கு தென்னிந்தியாவின் இந்த முக்கிய விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களும், ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், கர்நாடகாவின் கோலார், பெங்களூர் கிராமம் மற்றும் பெங்களூர் நகரம் என மொத்தம் 7 மாவட்டங்கள் இந்த விரைவுச்சாலையினால் பயன்பெற உள்ளன. மேலும், நாளுக்கு நாள் பெங்களூரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு புதிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது, சேட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு ஆகும். சுருக்கமாக STRR என அழைக்கப்படும் இந்த வட்ட சாலை ரூ.17,000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. "சேட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிடுவோம்" என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையால் STRR திட்டத்தை 2022 ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை கர்நாடக அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருவதாகவும், அவற்றிற்காக உடனடியாக ரூ.2 லட்சம் கோடியை தருவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு நாட்டிற்கும் சாலை உள்கட்டமைப்பானது மிக முக்கியமானது ஆகும். ஏனெனில், பெரும்பாலான வணிகங்கள் சாலை போக்குவரத்தை சார்ந்தே உள்ளன. இந்த விஷயத்தில் மிக நீண்ட காலமாக மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாட்டின் சாலை விரிவாக்க பணிகளில் தீவிரமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications








