ஒரே நேரத்தில் சர்வீஸ் சென்டர்களுக்கு படையெடுக்கும் சென்னை கார் உரிமையாளர்கள்... ஏன் தெரியுமா?
சென்னையில் உள்ள பெரும்பாலான கார் சர்வீஸ் சென்டர்கள் தற்போது மிகவும் பிஸியாக உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றைய தினம் முதல், வாகனங்களை இயக்குவதற்கு பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எச்சரிக்கைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதன் காரணமாகவும், கொரோனா வைரஸிடம் இருந்து தப்பும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும், பலர் பயணம் மேற்கொள்வதை தவிர்த்தனர். எனவே நீண்ட நாட்களாக வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், நீண்ட இடைவெளிக்கு பின்னர் பலர் மீண்டும் வாகனங்களை எடுத்து வருகின்றனர்.

பொதுவாக கார்களை மிக நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கும்போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். பேட்டரியில் சார்ஜ் இறங்குவது மற்றும் ஒயர்களை எலிகள் கடித்து விடுவது ஆகிய பிரச்னைகளை உரிமையாளர்கள் சந்திக்க கூடும். இப்படிப்பட்ட பிரச்னைகளை, நீண்ட காலத்திற்கு பின் தற்போது கார்களை எடுக்கும் உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இதனால் சென்னையில் இருக்கும் பெரும்பாலான கார் சர்வீஸ் சென்டர்கள் தற்போது பிஸியாக மாறியுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பின் கார்களை எடுக்கும் பலர், அவற்றை சர்வீஸ் செய்வதற்காக கொண்டு செல்வதே இதற்கு காரணம். முன்னணி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் மட்டுமல்லாது, தனியார் சர்வீஸ் சென்டர்களும் பிஸியாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அடையாறில் உள்ள மாருதி சுஸுகி சர்வீஸ் சென்டரை சேர்ந்த தனபதி என்பவர் கூறுகையில், ''ஊரடங்கின்போது கார்களை சர்வீஸ் செய்வதற்காக மூன்று அல்லது அதிகபட்சமாக நான்கு அழைப்புகள் மட்டுமே வரும். ஆனால் தற்போது நாங்கள் தினந்தோறும் சுமார் 15 ஆர்டர்களை பெற்று வருகிறோம்'' என்றார்.

பெரும்பாலான கார்களில் பேட்டரி, பிரேக்குகள் மற்றும் லைட்கள் சம்பந்தப்பட்ட புகார்களே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு சிலரின் கார்களில் ஒயர்களை எலிகள் கடித்து சேதப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஹூண்டாய் மற்றும் ஹோண்டா சர்வீஸ் சென்டர்களிலும், இதே போன்று சர்வீஸ் அழைப்புகள் அதிகளவில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சர்வீஸ் சென்டர்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, பெரும்பாலான மையங்கள் பிக்அப் மற்றும் டிராப் சேவையை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பகுதி நேர ஓட்டுனர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஊரடங்கு காரணமாக வேலையிழந்தவர்களில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

அவர்களில் ஒரு சிலருக்கு இது வருமானம் ஈட்டுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மணிகண்டன் என்பவர் இதற்கு ஒரு உதாரணம். கால் டாக்ஸி ஓட்டுனரான இவர் ஊரடங்கால் வேலையிழந்தார். ஆனால் தற்போது பகுதி நேரமாக ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக, 500 ரூபாயை அவர் வருமானமாக ஈட்டி வருகிறார். இது குறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








