முன்பதிவு செய்த பயணிகளை ஏறவிடாமல் தடுத்த டிக்கெட் இல்லாத பயணிகள்! எமர்ஜென்ஸி கோட்டாவில் புது டிக்கெட்!
முன்பதிவு செய்த ரயில் பெட்டியை முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்தவர்கள் ஆக்கிரமித்ததால் முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு எமர்ஜென்சி கோட்டா முறையில் அடுத்த ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டை புக் செய்து சென்னை ரயில்வே நிர்வாகம் உதவி செய்துள்ளது. இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் பலனடைந்துள்ளார்கள். இந்த பிரச்சினை மிக தீவிரமாக மாறிவரும் நிலையில், ரயில்வே அதிகாரிகளின் இந்த உதவி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு இல்லாத டிக்கெடுகளை எடுத்த பயணிகள் பலர் ஆக்கிரமித்துக் கொண்டு பயணம் செய்வது என்பது வாடிக்கையான ஒரு விஷயமாகிவிட்டது. முக்கியமாக வட இந்தியாவிற்கு செல்லும் ரயில்கள் பல இப்படியான ஆக்கிரமிப்புடன் பயணம் செய்கிறது. இது குறித்த அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகார்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்திலிருந்து ஹௌரா சூப்பர் பாஸ்ட் ரயில் மேற்குவங்க மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக வினய் யாதவ் என்பவர் டிக்கெட் புக் செய்திருந்தார். இவர் தனது குடும்பத்துடன் மேற்குவங்க மாநிலத்திற்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
இந்த ரயில் திட்டமிட்டபடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில் வினய் தனது குடும்பத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த போது இந்த ரயில் நின்று கொண்டிருந்த பிளாட்பார்மில் ஏகப்பட்ட கூட்டம் என்று கொண்டிருந்தது. குறிப்பாக இவர்களுக்கு எஸ்3 கோச்சில் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பெட்டி அருகே இவர்கள் சென்றபோது இந்த பெட்டி முழுவதும் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்த அல்லது டிக்கெட் இல்லாத பயணிகள் பலர் ஆக்கிரமித்து ரயில் பெட்டி உள்ளேயே இவர்கள் நுழைய முடியாதபடி நிரம்பி இருந்தார்கள். இதனால் வினய் மற்றும் குடும்பத்தினரால் ரயிலில் ஏறவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இவர்களுக்கு அந்த ரயில் பெட்டியில் பயணிக்க சரியான டிக்கெட் இருந்தது.
இறுதிவரை முயற்சி செய்தும் அவர்களால் ரயிலில் ஏற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், இவர்கள் உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் சேவை மையத்தை அணுகி நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கான ஆதாரங்களாக அவர்கள் எடுத்த புகைப்படங்களையும் அவர்களிடம் காட்டினார்கள். இதையடுத்து இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே அதிகாரிகளும் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் பலர் குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்து வருவதை உறுதி செய்த பின்பு மேற்கு வங்கத்திற்கு செல்ல வேண்டிய வினய் யாதவ் குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். இதையடுத்து அவர்களது டிக்கெட்டை முழுவதுமாக ரத்து செய்து அதற்கான ரீஃபண்ட் வழங்கவும் ஏற்பாடு செய்தார்கள்.
அது மட்டுமல்லாமல் 12ஆம் தேதி கிளம்ப இருந்த சென்னை சென்ட்ரல் ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்களை டிக்கெட் புக் செய்ய சொல்லி அந்த டிக்கெட்டை எமர்ஜென்சி கோட்டா முறையில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டாக மாற்றி கொடுத்துள்ளார்கள். இதையடுத்து வினய் மற்றும் குடும்பத்தினர் மேற்கு வங்கத்திற்கு அந்த ரயிலில் கிளம்பி சென்றுள்ளார்கள்.
இது என்ன எமர்ஜென்சி கோட்டா இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்! இந்த எமர்ஜென்சி கோட்டா என்பது எப்பொழுதும் ரயிலில் இருக்கும் ஒரு வசதி தான். இது பொதுவாக நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மெடிக்கல் அவசர தேவைக்காக பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு இறுதி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வழங்குவதற்காக குறிப்பிட்ட சில டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்காமல் எமர்ஜென்சி கோட்டாவிற்காக வைத்திருப்பார்கள்.
இந்த கோட்டாவில் டிக்கெட்டுகள் எதுவும் புக் செய்யப்படவில்லை என்றால் இறுதி நேற்று நேரத்தில் இந்த டிக்கெட்டுகள் எல்லாம் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வினய் யாதவ் குடும்பத்தினர் ரயிலில் ஏற முடியாமல் போனது ரயில்வே நிர்வாகத்தின் துரதிஷ்டவசமான சூழ்நிலையாக இருப்பதால் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவர்களுக்கு இந்த எமர்ஜென்சி கோட்டாவின் கீழ் டிக்கெட்டை ஒதுக்கீடு செய்து ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்களில் முன்பதிவு செய்யாத டிக்கெட் எடுக்கும் பயணிகள் பலர் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் ஏறி வருகிறார்கள். இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. சமீப நாட்களாக இது போன்ற சம்பவங்களை அடிக்கடி காண முடிகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையை மட்டும் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய சிஸ்டத்தை கொண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications









