சென்னையில் நடுரோட்டில் தீபிடித்து எரிந்த சிஎன்ஜி பஸ்! இது தான் விபத்திற்கு உண்மையான காரணம்!
சென்னையில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த சிஎன்ஜி பஸ் திடீரென தீப்பிடித்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் பயணித்த இந்த பஸ் தீப்பிடிப்பதை பஸ்ஸின் டிரைவர் முன்கூட்டியே அறிந்ததால் உடனடியாக செயல்பட்டு உயிர் சேதம் இல்லாமல் அனைத்து பயணிகளையும் காப்பாற்றினார்கள். ஆனால் பஸ் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பஸ் ஏன் தீ பிடித்தது? இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை அடையாறு டிப்போ பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த வழித்தட எண் 102 என்ற சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு செல்லும் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் ஏகப்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த பஸ் சரியாக அடையாறு டிப்போ அருகே வரும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்படும் முன்னர் பஸ்ஸின் கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து புகை கிளம்பியதை டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் புனிதமாக செயல்பட்டு பஸ்-ல் உள்ள பயணிகள் அனைவரையும் இறங்கச் சொல்லி உள்ளார்கள். உடனடியாக பஸ்ஸில் உள்ள பயணிகள் அனைவரும் இறங்கி வெகு தூரம் சென்று விட்டனர்.
பயணிகள் இறங்கிய அடுத்த ஒரு சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எறிய துவங்கியது. பஸ் கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டன. தீப்பிடித்து எரிந்த பஸ் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பஸ்ஸாக இருந்தது.
சென்னையில் கடந்த மாதம் தான் சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்களை அறிமுகப்படுத்தி சோதனை ஓட்டம் செய்து பார்க்க முடிவு செய்தார்கள். இப்படியான ஒரு பஸ் தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்கள் தீப்பிடித்து எறிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போது பொதுமக்கள் பேசி வருகிறார்கள்.
பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் எளிதாக தீப்பிடிக்காத நிலையில் சிஎன்ஜி வாகனங்கள் ஏன் தீ பிடிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கிறது. இந்த காரணங்களில் ஒன்றுதான் இந்த பஸ் தீப்பிடித்ததற்கும் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படியாக இந்த பஸ் தீப்பிடிக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்ற விபரங்களை பார்ப்போம்.
சிஎன்ஜி வாகனம் தீ பிடிக்க வேண்டும் என்றால் சிஎன்ஜி டேங்கில் இருந்து இன்ஜின் உள்ளே செல்லும் பைப்பில் ஏதாவது லீக் இருக்கலாம் அல்லது டேங்கிலேயே லீக் இருக்கலாம். இப்படியாக லீக் இருந்தால் பஸ் தீப்பிடிக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது பஸ் விபத்தில் சிக்கி இருந்தால் தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பஸ் விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎன்ஜி எரிபொருளை டேங்கில் ஏற்றும்போது ஏற்படும் சிறு பிழைகள் கூட தீவிபத்திற்கு காரணமாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் எரிபொருள் ஏற்றும்போது இந்த தீ விபத்து ஏற்படவில்லை என்பதால் இது காரணமாக இருக்க முடியாது. அதே நேரம் சிஎன்ஜி வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட அதிக பராமரிப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. சரியாக பராமரிப்பு செய்யப்படாத சிஎன்ஜி வாகனங்கள் தீ விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிகமான வெப்பம் இருக்கும் சூழ்நிலைகளில், இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிஎன்ஜி போன்ற எரிபொருட்கள் அதிக வெப்பத்தை தாங்காமல் வெடித்து சிதற வாய்ப்பு இருக்கிறது. இப்படியான சம்பவங்கள் இருந்தாலும் தீ விபத்து சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. சிஎன்ஜி சிஸ்டத்திற்கு அருகே இருக்கும் ஏதாவது எலெக்ட்ரிக் பொருட்களில் பிரச்சனை ஏற்பட்டால் சிறு தீப்பொறிகள் உருவாகும் பட்சத்தில் அப்பொழுதும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பிட இந்த காரணங்களால் மட்டுமே சிஎன்ஜி வாகனங்கள் தீ பிடித்து எறிய வாய்ப்பிருக்கும் நிலையில், இப்படியான ஏதாவது ஒரு காரணம் தான் இந்த பஸ் தீப்பிடித்து எரியவும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. டீசல் பெட்ரோல் வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்களுக்கு அதிகமான பராமரிப்பு தேவை. இந்த சிஎன்ஜி சிஸ்டம் எப்பொழுதும் சரியாக இருக்கிறதா என சோதனை செய்து கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட இந்த பஸ்கள் எல்லாம் டீசல் பஸ்களாக இருந்து அது சிஎன்ஜி பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படியாக சிஎன்ஜி கிட்களை பொருத்துவதில் ஏதாவது பிரச்சனை இருந்தால், இது போன்ற தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி இல்லை என்றால் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த இரு வேறு காரணங்கள் தான் நிச்சயம் தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம். விசாரணையின் பிறகுதான் உண்மையான விபரம் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








