செம்ம... ஆம்புலன்ஸ் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை... ககன்தீப் சிங் அதிரடியால் மனம் குளிர்ந்த சென்னை வாசிகள்!!
ஆம்புலன்ஸ் என்ற பேச்சுக்கு இடம் இருக்காத வகையில் ஓர் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மேற்கொண்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. நாளொன்று நாடு முழுவதும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் கொல்லி வைரசால் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்கள் பஞ்சம் உள்ளிட்ட அவலநிலை உருவாக தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் தற்போது தலைவிரித்தாட தொடங்கியிருக்கின்றது. நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்ட பின்னரும் வெகு நீண்ட நேரம் கழித்தே வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிற வண்ணம் ஓர் அதிரடி நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி களமிறங்கியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்ற உத்தரவிட்டிருக்கின்றார்.

நோயாளிகளை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை உணர்ந்து இந்த அதிரடி உத்தரவை அவர் பிறப்பித்திருக்கின்றார். நகரத்தின் முக்கிய மருத்துவமனைகள் சிலவற்றில் படுக்கை போதியளவில் இல்லாத நிலை தென்படுகின்றது. இதன் விளைவாக நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்கள் மணிக் கணக்கில் மருத்துவமனை வாசல்களிலேயே நோயாளிகளுடன் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், ஒரே இடத்தில் அதிகளவில் ஆம்புலன்ஸ் தேக்கமடைந்து வருகின்றன. இதுவே தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆம்புலன்ஸ் பஞ்சம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையிலேயே மாற்று சிந்தனையாக கார்களை ஆம்புலன்களாக மாற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.

சுமார் 250 கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ்கள் 'கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி' என்ற பெயரில் செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இந்த தற்காலிக ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்களில் உயிர்காக்கும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட முக்கிய மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

ஆகையால், நோயாளிகளின் உயர்களைக் காப்பாற்றுவதில் இந்த வாகனங்கள் ஆம்புலன்சுகளுக்கு இணையாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் இந்த வாகனங்கள் 15 மண்டலங்களில் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட்டிருக்கின்றன.

ஆம்புலன்ஸ் அவதாரத்திற்கு லேசான மாற்றங்கள் மட்டுமே கார்களில் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, நோயாளி ஒருவர் படுக்கும் வகையில் இருக்கை மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஆக்சிஜன் போன்ற முக்கிய மருத்துவ உபகரணங்களும் அதை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய வாகனங்களே ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகம் காணப்படும் பகுதிகளில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

மிக சமீபத்தில் இதேபோன்றதொரு ஓர் நடவடிக்கையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளம் தொழிலதிபர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர், அவரிடத்தில் இருந்த அனைத்து கார்களையும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸாக மாற்றியிருந்தார். இதனைக் குறைந்த கட்டணத்தில் இயக்க அவர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








