சென்னையில் ரோட்டில் பார்க் செய்யப்படும் கார்களை "தூக்க" மாநகராட்சி முடிவு! உஷாரா இப்பவே பார்க்கிங்கை தேடுங்க!
சென்னையில் சாலையில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள வாகனங்களை கைப்பற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் அடுத்த சில மாதங்களில் மழைக் காலம் துவங்கவுள்ளதால் அதற்கு முன்னதாக இந்த பணிகளைச் செய்து முடிக்க ஆயத்தமாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் சமீபத்தில் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளைத் தோண்டுதல், சாலை அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், மழை நீர் வடிகால் அமைத்தல் ஆகியவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்ற நடை முறை குறித்து விளக்கமாக அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சென்னையில் வரும் நவம்பர், டிசம்பர் மாதம் மழை பெய்தால் மழை நீர் தேங்காதபடி என்னென்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட வேண்டுமோ அதைச் செய்துவருகின்றனர். எப்படியான சூழ்நிலை வந்தாலும் அதில் மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் சாலையில் கார்களை பார்க்கிங் செய்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் சாலைகளில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ள கார்களை கையகப்படுத்தவும், இரவு நேரங்களில் கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்தாமல் சாலையில் நிறுத்திச் செல்லப்படும் கார்களையும் கைப்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் சாலையில் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் தான் கையகப்படப்படவுள்ளது. அதை அந்த பகுதியிலிருந்து அகற்றினால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
அடுத்தாக காரை வீட்டு வாசலில் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருந்தால் அந்த காரையும் கைப்பற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் தங்கள் காரை ரோட்டில் நிரந்தமாக பார்க் செய்து வந்தால் அவர்கள் உடனடியாக ஒரு பார்க்கிங்கை தேடி அங்கு தங்கள் கார்களை பார்க்கிங் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் உங்கள் கார் சாலையில் நிரந்தமாக பார்க்கிங் செய்யப்படுவதைக் கண்டறிந்தால் அவர்கள் உங்கள் காரை கைபற்றி மாநகராட்சி வசம் கொண்டு வந்துவிடுவார்கள் என்றும். அதன் பின்னர் அதற்கான உரிய அபராதம் செலுத்தி இனி பார்க்கிங் செய்யப்படும் இடத்தை மாநகராட்சி அதிகாரிகளுக்குக் காட்டிய பின்பு தான் கார் திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான மக்கள் இட நெருக்கடி காரணமாக தங்கள் கார்களை தங்கள் வீட்டின் முன்பே சாலையின் ஓரமாக பார்க்கிங் செய்கின்றனர். இப்படியாக பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது. பலர் பாதாளச் சாக்கடை மூடிகளை மறைத்து நிற்கும்படி கார்களை நிறுத்திவிடுகின்றனர்.
இதனால் மாநகராட்சி ஊழியர்களால் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய முடிவில்லை. இதனால் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. மழை நேரங்களில் இந்த அடைப்பு காரணமாக மழை நீர் முழுமையாக வடியாமல் தேங்கி நிற்கிறது. இதைத் தடுக்கவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அடுத்த ஒரு சில நாட்களில் இதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களைக் கணக்கெடுப்பார்கள். அதில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை முதலில் குறை வைத்து அந்த வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்துவார்கள். அதன் பின் மற்ற வாகனங்கள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும்முன் அதை நிறுத்த இடம் இருக்கிறதா என்பதை முடிவு செய்தபின்பு தான் காரை சொந்தமாக வாங்க வேண்டும். காரை ரோட்டில் நிறுத்துவது என்பது சட்டப்படி குற்றமாகும். சாலையில் கார்களை பார்க்கிங் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இது சாலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். இதனால் உங்கள் வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தால் இப்பொழுதே அதற்கான பார்க்கிங்கை தேடிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








