சென்னை வாசிகளே உஷார்.. சும்மா நிறுத்தி வைக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போறாங்க! திரும்பி கிடைக்கிறது கஷ்டம்!
சென்னை வாசியா நீங்க? உங்க வண்டிய ரொம்ப நாளா ரோட்டுல நிறுத்தி வச்சுட்டு ஏங்கேயாச்சும் போயிருக்கீங்களா? அப்போ சீக்கிரமே கார்பரேஷன்ல இருந்து ஆள் வந்து தூக்கிட்டு போக சான்ஸ் இருக்கு. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் தலைவலி இருக்கே அதை சொல்லி விளக்க முடியாது. அந்த அளவிற்கு இடையூறாகவே அவை சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சில நேரங்களில் பாதசாரிகள்கூட நடக்க முடியாத அளவிற்கு நடைமேடைமீது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு விடுகின்றன.

இதுபோன்ற அடாவடி செயல்களே சில நேரங்களில் மிகப் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. ஆமாங்க, டிராஃபிக் ஏற்படுவதற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணிகளில் முறையற்ற நிலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் ஒன்றாக இருக்கின்றது. முறைகேடாக வாகனம் நிறுத்தி வைக்கப்படுவதனால், மற்ற வாகனங்களின் போக்குவரத்தை தடைபட்டே மிகப் பெரிய வாகன நெரிசலை ஏற்படுத்திவிடுகின்றது.
இத்தகைய செயலைக் கண்டிக்கும் விதமாக காவல்துறை பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, வாகனங்களை பறிமுதல் செய்தல் அல்லது உச்சபட்ச அபராதத்தை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகின்றது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நடவடிக்கை முறையற்ற பார்க்கிங்கிற்கு எதிரிகா மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, கேட்பாரற்றுக் கிடக்கும் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டு ஸ்கிராப் செய்யும் பணிகளைகூட சில மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மிக முக்கியமாக நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் ஓர் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனில், மேலும், அந்த வாகனம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பழைய வாகனங்களாக இருக்கும் எனில் அவற்றின் உரிமையாளர்களிடம்கூட அனுமதி கேட்காமல் அகற்றப்பட்டு ஸ்கிராப் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தலைநகர் டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது சர்வசாதாரணமாகி நடைப்பெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. பழைய வாகனமே இல்லாத மாநிலமாக டெல்லியை மாற்றும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை டெல்லி அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சென்னையில் பல நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
நகரில் அதிகரித்தும் வரும் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் ஓர் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மழைக் காலத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மழை நீர் எளிதில் வெளியேறும் விதமாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பழைய கால்வாய்களை தூர் வாறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை புதுப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் சுகாதார மேம்பாட்டு பணிகளை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவ்வாறு, அவர் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது மழை நீர் செல்லும் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அவராகவே முன் வந்து அவற்றை அப்புறப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்தபோதே சென்னையில் 15 நாட்களுக்கும் மேலாக பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார். டெங்கு கொசு உற்பத்தியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நோய் பரவலை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சிலர் வண்டியை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இவர்களை இந்த அறிவிப்பு கடுமையான அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications