சென்னையில் நடக்கப்போகும் கார் ரேஸ்! டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா?
சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கி விட்டது. வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த போட்டியை நேரில் காண்பது எப்படி இந்த போட்டியில் என்னென்ன எல்லாம் நடக்கப் போகிறது என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் எஃப் 4 கார் பந்தயப் போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன்படி வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடல் பகுதியில் இந்த கார் ரேஸ் பந்தயம் நடக்க உள்ளது. தீவுத்திடலை சுற்றியுள்ள சாலையில் இந்த கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது.

சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் தயார் செய்யப்பட்டு அங்கு கார் பந்தயம் நடைபெற உள்ளது. சென்னை தீவு திடல் பகுதியில் துவங்கும் இந்த ரேஸ் ஃபிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் ஆகியவற்றை சுற்றி மீண்டும் தீவுத்திடல் பகுதிக்கு வந்து முடியும் வகையில் இந்த ரேஸ் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரேஸ் பாதையில் மொத்தம் 19 திருப்பங்கள் இருக்கின்றன. இந்த ரேஸிக்கான கார்களை தயார் செய்யும் பகுதி எல்லாம் தீவுத்திடல் உள்ளே கட்டமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் தற்போது தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. போட்டிக்கான வாகனங்களை தயார் செய்வது முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக அரசின் விளையாட்டுத்துறை தான் இந்த ரேஸிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் ரேஸ் நடக்கும் தினத்தன்று ஃபார்முலா 4 மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன. இந்த இரு போட்டிகளும் சாலைகளில் இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற உள்ளன. இந்த ரேஸில் கலந்து கொள்ள 12 டிரைவர்கள் தயாராகி உள்ளனர். அதில் சர்வதேச டிரைவர்களும் உள்ளடக்கம்.
இந்தியன் ரேஸிங் லீக் போட்டியில் லீக் முறையில் ரேஸ் நடத்தப்படும். ஒவ்வொரு லீக் டீமிலும் நான்கு டிரைவர்கள் இருப்பார்கள் அதில் இரண்டு டிரைவர்கள் இந்திய டிரைவர்களாகவும் இரண்டு டிரைவர்கள் சர்வதேச டிரைவர்களாகவும் இருப்பார்கள். அந்த நான்கு டிரைவர்களில் ஒருவர் பெண்ணாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 ரேஸிங்கை பொருத்தவரை ஓபன் வீல் ரேஸிங்காக நடைபெற உள்ளது. இதில் ஜூனியர் டிரைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கார்ட் ரேஸிங்கிற்கும் எஃப்3 கேட்டகிரி வாகனத்திற்கும் இடைப்பட்ட வாகனமாக இந்த எஃப்4 வாகனங்கள் தயார் செய்யப்பட்டு அது ரேசில் விடப்படுகின்றன. இதனால் இது புதுவகை ரேஸாக இருக்கும். கார் ரேஸ் பிரியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இது இருக்கும்.
இந்த ஃபார்முலா 4 ரேஸில் பங்கேற்கும் கார்கள் எல்லாம் சுமார் 1600 சிசி இன்ஜின் கொண்ட கார்களாக வடிவமைக்கப்பட உள்ளன. இது 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக இந்த கார்கள் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விநியோகம் என்பது தற்போது துவங்கிவிட்டது.
டிக்கெட்டை பே டி எம் தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த போட்டியை காண ஆங்காங்கே அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி டிசம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமைக்காக தனி டிக்கெட்டும் டிசம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனி டிக்கெட் பெற வேண்டும்.
இந்த போட்டியை காண்பதற்கான கேலரிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன அதன்படி பிரீமியம் ஸ்டாண்ட், கிராண்ட் ஸ்டாண்ட், கோல்ட் லாஞ்ச், பிளாட்டினம் லாஞ்ச், என இவை பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் டிக்கெட்களை சீக்கிரம் புக் செய்தால் அவர்களுக்கு குறைந்த விலையிலும் கடைசி நேரத்தில் புக் செய்பவர்களுக்கு அதிகமான விலையிலும் டிக்கெட் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பிரீமியம் ஸ்டாண்டில் சனிக்கிழமை விரைவாக டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ரூபாய் 3399 என்ற விலையிலும் தாமதமாக டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 3999 என்ற விலையிலும், ஞாயிற்றுக்கிழமைக்கு விரைவாக புக் செய்பவர்களுக்கு ரூபாய் 5949 என்ற விலையிலும் தாமதமாக புக் செய்பவர்களுக்கு 6999 என்ற விலையிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கேலரியில் சுமார் 400 பேர் வரை அமர்ந்து இந்த ரேஸ் போட்டியை காண முடியும்.
அடுத்ததாக கிராண்ட் ஸ்டாண்ட் என்பது ஐந்து விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை போட்டியை காண ரூ1699 என்ற விலையில் சீக்கிரம் புக் செய்பவர்களுக்கான டிக்கெட்டும், ரூ1999 என்ற விலையில் தாமதமாக புக் செய்பவர்களுக்கான டிக்கெட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை போட்டியை காண சீக்கிரம் புக் செய்பவர்களுக்கு ரூ2,125 என்ற விலையிலும் தாமதமாக புக் செய்பவர்களுக்கு ரூ2499 என்ற விலையிலும் டிக்கெட் புக் செய்யப்படுகின்றன. இதில் மொத்தம் 5880 டிக்கெட்டுகள் இருக்கின்றன.
அடுத்ததாக கோல்ட் லாஞ்ச் பகுதியை பொருத்தவரை சனிக்கிழமை ரேஸ் போட்டியை பார்க்க வருபவர்களுக்கு சீக்கிரம் புக் செய்தால் ரூ6799 என்ற விலையிலும் தாமதமாக புக் செய்தால் ரூ7999 விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை போட்டியை காண சீக்கிரம் புக் செய்தால் ரூ11899 விலையிலும் தாமதமாக புக் செய்தால் ரூ13999 என்ற விலையிலும் டிக்கெட்கள் விற்பனையாகி வருகின்றன. இதில் மொத்தம் 1000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகள் செய்யப்பட உள்ளன.
அடுத்ததாக பிளாட்டினம் லாஞ்சை பொறுத்தவரை சனிக்கிழமை போட்டியை காண விரைவாக புக் செய்பவர்களுக்கு ரூ10999 என்ற விலையிலும் தாமதமாக புக் செய்வதற்கு ரூ12999 என்ற விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை போட்டியை காண விரைவாக புக் செய்பவர்களுக்கு ரூ16999 என்ற விலையிலும் தாமதமாக புக் செய்பவர்களுக்கு ரூ19999 என்று விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்த கேலரியிலும் சுமார் 1000 பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே இப்படியான வித்தியாசமான ஸ்ட்ரீட் ரேஸிங் என்பது சென்னையில் தான் முதன்முறையாக நடக்கிறது. இதை காண கார் ரேஸ் அரிசியில் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது இதற்கான டிக்கெட் புக்கிங் நடந்து வரும் நிலையில் நீங்கள் இப்பொழுது டிக்கெட்டை புக் செய்வது நல்லது. வார விடுமுறையை கொண்டாட இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








