வெளியான மோடி வீடியோ.. தமிழக போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்.. வாகன ஓட்டிகளே உஷார்
டூவீலர்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிகளை ஏன் முறையாக அமல்படுத்துவது இல்லை? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிகளை ஏன் முறையாக அமல்படுத்துவது இல்லை? என போலீசாரிடம், சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 2.51 கோடி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 84 சதவீத வாகனங்கள், டூவீலர்கள்தான். எனவே டூவீலர் ஓட்டிகள்தான், விபத்துக்களில் அதிக அளவு உயிரிழக்க நேரிடுகிறது. ஹெல்மெட் அணியாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஹெல்மெட் அணியாததன் காரணமாக, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும், 4,091 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அதன்பின் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 2017ம் ஆண்டில், இந்த எண்ணிக்கையானது 2,956ஆக குறைந்தது.

ஆனால் அதன்பின் ஹெல்மெட் அணியும் வழக்கம், இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. எனினும் அத்தகையவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் போலீசார் எடுப்பதில்லை என்ற புகாரும் பரவலாக எழுந்து வருகிறது.

எனவே டூவீலர்களை ஓட்டுபவர் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இந்த விதியை உரிய முறையில் அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்த இந்த மனு, நீதிபதி மணிக்குமார் மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாரை நோக்கி, நீதிபதிகள் சாட்டையை சுழற்றினர்.

''மோட்டார் வாகன சட்டப்படி, இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்தான். இருந்தாலும் ஹெல்மெட் அணிந்து கொண்டு, டூவீலரின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த ஒருவரை கூட நாங்கள் பார்க்கவில்லை'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

இதுதவிர கார்களில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே காரில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதியை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

சீட் பெல்ட் என்பது உயிரை காக்கும் ஒரு கருவி போன்றது. எனினும் சீட் பெல்ட் அணியும் வழக்கம், இந்தியாவில் பலரிடம் கிடையாது. ஆனால் காரில் ஏறிய உடனேயே சீட் பெல்ட் அணியும் வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரில் ஏறிய உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி சீட் பெல்ட் அணியும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த சூழலில்தான், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் விதிகளை ஏன் முறையாக அமல்படுத்துவதில்லை? என்கிற ரீதியிலான கேள்வியை போலீசாரிடம் கேட்டுள்ளது சென்னை ஐகோர்ட். எனவே இனி இந்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணிப்பது நல்லது. அத்துடன் காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளலாம். இதன்மூலம் போலீசாரின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதோடு, விபத்துக்களில் இருந்தும் தப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications