சிலை கடத்தல் வழக்கில் வசமாக சிக்குகிறது டிவிஎஸ் குழுமம்? ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரிய வேணு சீனிவாசன்
டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், சிலை கடத்தல் வழக்கில், முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், சிலை கடத்தல் வழக்கில், முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில், பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மயில் ரூபத்தில் வந்த பார்வதி, சிவனை மலர் தூவி பூஜித்தார் என்பது ஐதீகம். எனவே வாயில் குவளை மலரை கவ்வியபடி, மயில் ஒன்று சிவலிங்கத்துக்கு பூஜை செய்வது போன்ற கற்சிலை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

1,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த மயில் சிலை, மூலவர் அருகே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 2004ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்னர், பழமையான இந்த மயில் சிலை கொள்ளையடிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பக்தர் ஒருவர் புகார் அளித்தார். இதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சமீபத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் புனரமைப்பு பணிகளில், கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ரங்கராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரங்கராஜன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 9) நடத்தியது. அப்போது இந்த வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று (ஆகஸ்ட் 10) விசாரணையை தொடங்க இருந்தார். இந்த சூழலில், டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன், முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென மனு தாக்கல் செய்தார்.

10,000 தொழிலாளர்கள் பணியாற்றும் டிவிஎஸ் குழுமங்களின் தலைவரான வேணு சீனிவாசன் அந்த மனுவில், ''அறக்கட்டளை நிதியின் கீழ், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 100க்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து கொடுத்துள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2004ம் ஆண்டில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது, 70 லட்ச ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்ததாக, டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதுதவிர கடந்த 2015ம் ஆண்டில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்து, 25 கோடி ரூபாய் மதிப்பில், கும்பாபிஷேகத்திற்காக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்ததாகவும், வேணு சீனிவாசன் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதாவது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களின் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தன்னை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரியுள்ளார்.

''புனரமைப்பு பணிகளை தவிர, கோயிலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதவிர கபாலீஸ்வரரின் தீவிர பக்தன் நான். அப்பாவியான என்னை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' எனவும் வேணு சீனிவாசன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








