சென்னை வாசிகளே உஷாரா இருந்துக்கோங்க.. அதிகம் வாகனம் திருட்டு போகும் நகரங்களின் பட்டியல்ல 2வது இடத்துல இருக்கு!
இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களிள் அக்கோ (Acko)-வும் ஒன்று. இந்த இன்சூரன்ஸ் கம்பெனியே ஓர் விரிவான அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. அதாவது, இந்தியாவில் அதிகம் களவுப் போகும் வாகன மாடல்கள் எது? மற்றும் இந்தியாவின் எந்த நகரத்தில் அதிகம் வாகனங்கள் களவாடப்படுகின்றன? என்பது பற்றிய புள்ளி விபரங்களையே அது வெளியிட்டு இருக்கின்றது.
இந்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் மிக மிக அதிகளவில் திருடப்படும் கார் மாடலாக மாருதி சுஸுகி வேகன் ஆர் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுவே திருடர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக இருக்கின்றது. இதேபோல், அவர்களின் மனம் கவர்ந்த பைக் மாடலாக ஹீரோ ஸ்பிளெண்டர் இருப்பதாகவும் அக்கோ அதன் ஆய்வுகளின் வாயிலாக தெரிவிக்கின்றது.

நாம் இந்த பதிவில் இந்தியாவின் எந்த நகரத்தில் அதிகம் வாகனங்கள் களவுப் போயிருக்கின்றன? நம்முடைய சென்னை இந்த பட்டியலில் இருக்கின்றதா? இருக்கின்றது என்றால் எந்த இடத்தை அது பிடித்துள்ளது? என்பது பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டெல்லி முதல் இடம்: அக்கோவின் தகவல்களின்படி தலை நகர் டெல்லியே இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின்படி ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் இந்த நகரத்தில் ஒரு வாகனம் களவு போயிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு நாளும் 105 வழக்குகள் வாகன திருட்டு பற்றி பதியப்பட்டு இருக்கின்றன.

இதனால்தான் தேசத்தின் தலைநகர் தற்போது வாகன திருட்டில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் களவுபோன ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 37 சதவீதம் டெல்லியிலேயே களவு போயிருக்கின்றன என்கிற அதிர்ச்சியான தகவலையே அக்கோ வெளியிட்டு இருக்கின்றது. பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே அரங்கேறி இருக்கின்றன.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என பரவலாகக் கூறப்படும் நம்முடைய சென்னை இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதன் வாயிலாக சென்னையில் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. நாடு முழுவதும் அரங்கேறிய ஒட்டுமொத்த வாகன களவுகளில் 10.5 சதவீதம் நம்முடைய சென்னையில் அரங்கேறி இருப்பதாக அக்கோவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அதிர்ச்சியளிக்கம் வகையில் அமைந்திருக்கின்றது. ஏனெனில் சென்ற 2022 ஆண்டில் இது 5 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது அது மேலும் பல மடங்காக அதிகரித்திருப்பதே தமிழக மக்களுக்கும், குறிப்பாக, சென்னை மக்களுக்கும் வேதனை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
மூன்றாவது இடத்தில் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இருக்கின்றது. இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன திருட்டில் 10.2 சதவீதம் பெங்களூருவில் அரங்கேறி இருக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் இது 9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது 1.2 சதவீதம் உயர்வை வாகன திருட்டில் பெங்களூரு சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நான்காவது இடத்தில் ஹைதராபாத்தும், ஐந்தாவது இடத்தை மும்பையும் பிடித்து உள்ளது. குறிப்பாக மும்பை நகரத்தில் அரங்கேறிய வாகன திருட்டில் பாதி வழக்குகளில் போலீஸார் தீர்வு கண்டுவிட்டதாக கூறப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டில்கூட மும்பை நகர காவல்துறையினர் 55 சதவீத திருட்டு வழக்குகளில் உடனடியாக செயல்பட்டு வாகனங்களை மீட்டுக் கொடுத்திருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையையே அக்கோ-வின் தரவுகள் காண்பிக்கின்றன. அதேவேளையில், உங்கள் வாகனத்தை திருட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் என நினைத்தால் சந்தையில் பல்வேறு திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஜிபிஎஸ் டிராக்கிங் கருவிகளைப் பொருத்துவதன் வாயிலாக திருடப்பட்ட வாகனங்களைக்கூட போலீஸின் உதவியின்றியே நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications









