சேர்ந்தா இப்படி ஒரு கம்பெனில வேலைக்கு சேரணும்.. ஊழியர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கிய சென்னை நிறுவனம்
"இவரு முதலாளி இல்ல தெய்வம்-ங்க".. அப்படினு சொல்லுற அளவுக்கு தரமான சம்பவத்தைச் சென்னையைச் சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தின் நிறுவனர் செய்து இருக்கின்றார். தன்னிடம் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு கிடைத்த லாபத்தில் இருந்து பங்கு தரும் விதமாக விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்வித்து இருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சென்னையைச் சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் ஒன்று தன்னுடைய ஊழியர்களைச் சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றது. ஊழியர்களின் தகுதிக்கு ஏற்பவாறு வெவ்வேறு விதமான கார் மாடல்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன. சுமார் 50 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு 50 கார்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

'ஐடியாஸ் 2 ஐடி' எனும் இந்த சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனமே ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன், அவருடைய கைகளாலேயே காரை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓர் திருவிழாவைப் போல அரங்கேறியது.
ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அங்கு ஒன்று சேர்த்த நிறுவனம், அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே கார்களுக்கான சாவியும் வழங்கப்பட்டது. இந்த கார் பரிசளிப்பால் தனியார் ஐடி நிறுவன ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டு இருக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கே தனியார் ஐடி நிறுவனம், கார் பரிசளிப்பைச் செய்து இருக்கின்றது.

குறிப்பிட்ட கார் மாடல்களை அவர்களிடம் காண்பித்து அதில் ஒன்றை அவர்களாகவே தேர்வு செய்துக் கொள்ள நிறுவனத்தால் கூறப்பட்டதாக கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் விரும்பிய காரே அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 38 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளையும் ஒதுக்கி அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் அந்த தனியார் நிறுவனம் மாற்றி அழகு பார்த்துள்ளது.
இது ஊழியர்களுக்கு மேலும் மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது. சென்னயைச் சேர்ந்த இந்த நிறுவனம் இதுபோன்று கார்களை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் ஐடியாஸ்2இடி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றது. இந்த சம்பவம் சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அரங்கேறியது.

நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 50 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த கார் பரிசளிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையிலேயே ஐந்து ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு கார் பரிசளிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆடி சொகுசு கார் தொடங்கி மாருதி சுஸுகி இக்னிஸ் வரையில் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஊழியர்களின் பணி நிலை மற்றும் அவர்களின் பங்களிப்பைப் பொருத்து இந்த கார் பரிசளிப்பு உள்ளது. இக்னிஸ், ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஆடி உள்ளிட்ட கார் மாடல்களே ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், ஆடி கார்தான் மிகவும் விலை உயர்ந்த கார் மாடலாகும்.
ஆனால், என்ன மாடல், எந்த தேர்வு வழங்கப்பட்டது என்பது பற்றிய துள்ளியமான விபரம் வெளியாகவில்லை. ஆகையால், அந்த காரின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய விரிவான தகவலை எங்களால் தெரிவிக்க இயலவில்லை. இந்த கார் பரிசளிப்பு நிகழ்வால் மற்ற ஐடி நிறுவன ஊழியர்கள் சற்று பொறாமையில் ஆழ்ந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐடி ஊழியர்கள் மட்டுமா நாங்களும்தான் என்கிற உங்களுடைய மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்கின்றது. அதேவேளையில், நாம் ஏன் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும். நாம் ஒரு நிறுவனத்தை தொடங்கி, பிறருக்கு இதுபோன்று கார்களை பரிசாக வாரி வழங்கலாம் என்கிற எண்ணத்தை மனதில் விதைத்து, அதன்படி நடக்க நாங்கள் உங்களை வாழ்த்துகின்றோம்.


Click it and Unblock the Notifications









