ஆமை வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை முயல் வேகத்திற்கு மாற்றச் சோதனை! மாடு மட்டும் உள்ள வராம இருக்கனும்!
சென்னையிலிருந்து ஜோலார் பேட்டை வழியிலான ரயில் பாதையில் 130 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. வந்தே பாரத் ரயிலுக்காக இந்த பாதை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சென்னை- பெங்களூரு- மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலைக் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பெங்களூருவில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ரயில் சகல வசதிகளைக் கொண்டது. மேலும் முக்கியமாக 130 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. தற்போது சென்னையில் காலை 5.50மணிக்கு கிளம்பி பெங்களூருவிற்குக் காலை 10.20 மணிக்கு வருகிறது.

இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும் இந்த ரயில் பாதை அதற்கு உகந்ததாக இல்லை இதனால் வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்திலும் திருப்பங்களில் 70-75 கி.மீ வேகத்திலும் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தியாவிலேயே மிக மெதுவான வந்தே பாரத் ரயில் இதுவாக தான் இருக்கிறது.
இந்நிலையில் இந்த ரயிலின் வேகத்தைக் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து ரயில் பாதைகள் எல்லாம் அதிக வேகத்தில் ரயில் செல்லும் போது தாங்கும் அளவிற்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட பாதைகளைச் சோதனை செய்யத் தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சென்னையிலிருந்து - ஜோலார் பேட்டை வரை 130 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து வந்தேபாரத் மற்றும் சதாப்தி ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அதிகரிக்கப்பட்டால் சென்னையிலிருந்து கிளம்பிய ரயில் 130 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பயணித்தால் சுமார் 350 கி.மீ தூரத்தை சுமார் 2 மணி நேரம் 30 நிமிடத்தில் வந்துவிட முடியும்.
ஆனால் ரியல் கிளம்பியவுடனேயே 130 கி.மீ வேகத்தை எட்டி விடாது. அதேபோல எல்லாவிடத்திலும் 130 கி.மீ வேகத்தில் செல்லமுடியாது. இடையில் காட்பாடியில் நிறுத்தம் வேறு வருகிறது. எனச் சேர்த்துக் கணக்கிட்டால் எப்படியும் அதிகபட்சம் 3 மணி நேரத்திற்குள் பெங்களூருவை வந்தடைய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் காலையில் 5:50 மணிக்குக் கிளம்பும் ரயில் தற்போது 10:20க்கு தான் பெங்களூருவை வந்தடைகிறது. இது மாறி சென்னையில் கிளம்பிய 3 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணிக்கே பெங்களூரு வர வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா என்ற விபரம் தெரியவில்லை. இது நடந்துவிட்டால் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட விமான பயணத்தை விடச் சீக்கிரமாக அதாவது விமானத்தின் ஃபோர்டிங் மற்றும் பெங்களூரு விமான நிலையத்தின் தூரம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால் விமானத்தை விட ரயிலில் விரைவாகச் சென்னை- பெங்களூரு பயணம் மாறிவிடும்.
தற்போது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் கிளம்புகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. இதனால் இதில் ஏதாவது ஒரு ரயிலை வேறு நேரத்தில் இயக்கினால் அந்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்பவர்களுக்குச் சுலபமாக இருக்கும் என்று ரயில் பயணிகள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications