சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
கேரள மாநில மின்சார வாரியம் செய்த தாமதம் காரணமாக தமிழகத்திற்கு வரவேண்டிய முக்கியமான வந்தே பாரத் ரயில் ஒன்று தற்போது வரவில்லை என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய வந்தே பாரத் ரயிலை கேரளா மாநில மின்சார வாரியம் தடுத்தது எப்படி? இதற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப சிக்கல் என்ன? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது ரயில் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட்டு முழுவதுமாக மின்சக்தியிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின்சார வாரியத்திடம் ஆங்காங்கே சப் ஸ்டிடேஷங்களை அமைத்து மின்சாரத்தை பெற்று ரயில் பாதையில் உள்ள கேபிள்களில் அந்த மின்சாரத்தை செலுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக ரயில்வே நிர்வாகம் அந்தந்த மாநில மின்சார வாரியத்திற்கு பணமும் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் தென்காசி-கொல்லம் ரூட்டில் புதிய வந்தேபாரத் ரயிலை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த ரயில் பாதை தற்போது தான் மின்மயமாக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த ரயில் பாதை வழியாக வந்தேபாரத் உள்ளிட்ட அனைத்து மின்சார ரயில்களையும் இயக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த ரூட் வழியாக வந்தேபாரத் ரயில் இயக்கப்பட்டால் கேரளா மற்றும் தமிழகம் இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் வந்தேபாரத் ரயில் அறிமுகமாகும் என்பதால் இது திட்டமிடப்பட்டது.
இதில் தமிழக எல்லை பகுதிகளில் ஏற்கனவே ரயில் பாதை மின்மயமாகிவிட்டது. ஆனால் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரை உள்ள ரயில் பாதையை மின் மயமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் இந்த பகுதி வழியாக மின்சார கேபிள்கள் போட்டு அனைத்து கட்டமைப்புகளையும் தயார் செய்து விட்டது.

இங்கு மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகேயும் புனலூர் ரயில் நிலையம் அருகே மின்சார வாரியம் சார்பில் சப் ஸ்டிடேஷன் அமைக்கப்பட்டு ரயில்வே பாதைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிக்கு மின் சப்ளை வழங்கப்பட வேண்டும்.
இதற்காக ரயில்வே நிர்வாகம் அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரியத்திற்கு பணம் கொடுத்து சப் ஸ்டேஷன்களை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி கேரளா மாநிலத்தில் உள்ள புனலூரில் சப் ஸ்டேஷன் அமைக்க ரயில்வே நிர்வாகம் ரூபாய் 28 கோடி நிதியை கொடுத்துள்ளது. அதன்படி சப் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் இழுக்கப்பட்டு மின்சாரம் சப்ளை வழங்கப்பட வேண்டும்.

செங்கோட்டையை பொறுத்த வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் இழுக்கப்பட்டு மின்சார சப்ளை வழங்கப்பட வேண்டும். இதில் தமிழக அரசு மின்சார வாரியம் மூலம் இந்த 15 கிலோமீட்டர் தூரத்திற்கும் கேபிள் இழுத்து செங்கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார சப்ளை வழங்கிவிட்டது. ஆனால் கேரள மாநில அரசு இந்த பணியை மிக மெதுவாக செய்து வருகிறது, அல்லது கிடப்பில் போட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் செங்கோட்டை, புனலூர் ஆகிய பகுதி தண்டவாளத்தை மின்மயமாக்குவது சிரமமாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 27ம் தேதி இந்த ரூட்டில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கேபிள் போடப்பட்டுள்ளதால் அதை சோதனை செய்ய சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனைக்காக வீரவநல்லூர் பகுதியில் உள்ள சப்-ஸ்டேஷனிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு முழுமையாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் தினம்தோறும் இப்படியாக நீண்ட தொலைவில் இருந்து மின்சாரத்தை கடத்திக் கொண்டு வருவது சாத்தியமில்லாத விஷயம்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த ரூட்டில் மின்சார ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் தயாராக இருக்கும் பொழுதும் கேரள மாநில மின்சார வாரியம் மின் சப்ளை வழங்க தாமதப்படுத்தி வருவதால் இந்த ரூட்டில் மின்சார ரயில்கள் இயக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொல்லத்தில் இருந்து செங்கோட்டை தென்காசி வழியாக சென்னை அல்லது பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கேரள மின்சார வாரியம் செய்துள்ள இந்த தாமதம் காரணமாக இந்த ரயில் அறிமுகம் தள்ளிப் போய் உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் தான் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வந்தே பாரத் ரயிலில் இருந்தால் நிச்சயம் இது உதவியாக இருக்கும் என்பதால் இதை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். தற்போது கேரள மாநில அரசு செய்துள்ள தாமதம் காரணமாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்வே நிர்வாகம் எப்பொழுதும் இடை நில்லா மின்சார சேவையை அந்தந்த மாநில மின்சார வாரியத்திடம் பெற்று வரும் நிலையில், இதற்கு தகுந்த பணமும் செலுத்தி வருவதால் இந்தத் திட்டம் மூலம் மாநில அரசுகள் அதிகம் பலன் பெறுகின்றன. இருந்தாலும் கேரள அரசு இந்த திட்டத்தில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளதால் கேரள மாநில மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications









