சென்னை லோக்கல் ரயில்களில் ஏன் ஏசி பெட்டிகள் இல்லை தெரியுமா? இது தான் காரணமா?
சென்னை லோக்கல் ரயில்களில் (Chennai Sub-Urban Trains) ஏன் ஏசி பெட்டிகள் (Ac Coaches) இல்லை? சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்வே பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை நாம் இங்கே காணலாம் வாருங்கள்.
சென்னை மாநகரில் போக்குவரத்து வசதிக்கு மிக முக்கிய வசதியாக இருப்பது லோக்கல் ரயில்கள்தான். தினமும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், தினக்கூலியாக செல்லும் நபர்கள், வியாபாரத்திற்காக செல்லும் நபர்கள் என ஏகப்பட்ட தரப்பு மக்கள் இந்த லோக்கல் ரயிலை நம்பி தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை திட்டமிட்டு வருகின்றனர்.

தற்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு (Chengalpattu) ரூட்டிலும், வேளச்சேரி (Velachery) ரூட்டிலும் சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் (Arakkonam) ரூட்டிலும், தற்போது லோக்கல் ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த லோக்கல் ரயில்களில் பயணித்து வருகின்றனர். லோக்கல் ரயில்கள் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இந்த லோக்கல் ரயில்களில் இதுவரை ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்படவில்லை.
தற்போது வரை முதல், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் சென்னையை போல அதிகம் லோக்கல் ரயில்கள் பயன்படுத்தப்படும் நகரம் என்றால் அது மும்பை தான். ஆனால் மும்பையில் இயங்கி வரும் லோக்கல் ரயில்களில் (Mumbai Local Train) கடந்த 2017 ஆம் ஆண்டு ஏசி பெட்டிகள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. தற்போது அங்கு முழுமையாக ஏசி பெட்டிகளை கொண்ட லோக்கல் ரயில்கள் கூட இயங்கி வருகிறது.

குறைவான விலையில் ஏசி பெட்டியில் பயணிக்கும் வாய்ப்பை மும்பை நகர மக்கள் தற்போது பெற்று வருகின்றனர். ஆனால் சென்னைக்கு இதுவரை ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்படவில்லை. மும்பையில் இயங்கி வரும் லோக்கல் ரயில்களுக்கான ஏசி பெட்டிகள் எல்லாம் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் வைத்து தான் தயாரித்து அனுப்பப்படுகிறது. இந்த பெட்டிகள் அறிமுகமாகும் போதே சென்னை லோக்கல் ரயிலுக்கும் இந்த பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மும்பையில் லோக்கல் ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகும் சென்னை லோக்கல் ரயில்களில் ஏசி பெட்டிகள் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. தெற்கு ரயில்வே இதற்கான முன்னெடுப்பை கையில் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தென்னக ரயில்வே முடிவு செய்தால்தான் சென்னை லோக்கல் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க முடியும்.

தற்போது திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை வரை சுமார் 3 மணி நேரம் பயணம் செய்து மக்கள் லோக்கல் ரயில்களில் பயணித்து வருகின்றனர். அதேபோல அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை இரண்டு மணி நேரம் பயணம் ஆகிறது. இந்த பயணம் கடும் சிரமமான பயணமாக தான் இருக்கிறது.
இவ்வளவு நீண்ட தூர பயணத்திற்கு ஏசி பெட்டி இருந்தால் அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். மக்கள் ஏசி பெட்டியில் பயணிக்க அதிக பணம் செலவு செய்ய தயாராக இருந்தும் ரயில்வே நிர்வாகம் இதை செய்யாமல் தவிர்த்து வருவதாக ரயில் பயணிகள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது சென்னை ஐசிஎஃப் ஆலையில் மும்பை லோக்கல் ரயில்களுக்கான ஏசி பெட்டிகள் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று கூட மும்பை லோக்கல் ரயிலில் 20 புதிய ரயில்கள் ஏசி பெட்டி கொண்டவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு மத்திய ரயில்வே லோக்கல் ரயில்களில் ஏசி பெட்டியை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதுவரை தென்னக ரயில்வேயில் இருந்து ஏசி பெட்டிகளுக்கான ஆர்டர் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.
சென்னையில் லோக்கல் ரயில்களில் ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ரயில்களில் அதிக கூட்டம் காரணமாக ஏசி பெட்டிகள் இல்லை என சிலர் கூறி வருகின்றனர். ஆனால் ஏசி பெட்டிகள் இருந்தால் இன்னும் கூட்டத்தை சமாளிக்க வசதியாக தான் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏசி பெட்டிகளை இணைப்பது அல்லது முழுமையான ஏசி ரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சென்னை மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும். பலர் இந்த ரயிலுக்காக காத்திருக்கிறார்கள். மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தென்னக ரயில்வே மனது வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









