சென்னை - மதுரை இடையே தேஜஸ் ரயில்... குளு, குளு வசதியுடன் ஜிலு ஜிலு பயணம்!
சொகுசு வசதிகளுடன் கூடிய நாட்டின் இரண்டாவது அதிவேக தேஜஸ் ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட இருக்கிறது. சொகுசான இருக்கைகள், சிசிடிவி கேமரா, டிவி திரை மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது தேஜஸ
சொகுசு வசதிகளுடன் கூடிய நாட்டின் இரண்டாவது அதிவேக தேஜஸ் ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரயில்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கவும், வேகத்தை அதிகரிக்கவும் மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு தேஜஸ் என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

மும்பை- கோவா இடையில் முதல் தேஜஸ் ரயில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது தேஜஸ் ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட இருக்கிறது.

பிற ரயில்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் விதத்தில் இந்த ரயிலில் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் வண்ணத்திலான வினைல் ஸ்டிக்கர் மூலமாக அலங்காரமாகவும், தனித்துவமாகவும் இருக்கும்.

இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 23 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதில், 18 இரண்டாம் வகுப்பு அமரும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 உயர் வகுப்பு பெட்டிகளம், 3 டீல் ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் இருக்கைகள் உயர் வகுப்பு இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணிக்கலாம்.

இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் 72 பேர் பயணிப்பதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான உயர் வகுப்பு ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

தேஜஸ் ரயிலில் 2+2 இருக்கை அமைப்புடைய பெட்டிகள் மிக தாராளமான இடவசதியை அளிக்கும். ஆம்னி பஸ்களில் இருப்பது போல மிக சொகுசான புஷ் பேக் சீட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இருக்கைகளில் 9 அங்குல எல்இடி திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது பயணத்தை அலுப்பில்லாமல் பொழுதுபோக்க ஏதுவாக அமையும்.

ஒவ்வொரு பெட்டியிலும் உணவு பதார்த்தங்களை சூடு படுத்திக் கொள்வதற்கான ஓவன், காபி மற்றும் டீ வழங்கும் எந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. கழிவறைகள் மிக நவீன முறையில் இருப்பதுடன், கை கழுவுவதற்கான சோப்பு திரவம் வினியோகிக்கும் சாதனம், தானியங்கி முறையில் இயங்கும் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், அனைத்து ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தீ பிடிப்பது குறித்து எச்சரிக்கும் சாதனம், கெட்ட வாடைகளை தவிர்க்க ரயில் பெட்டியிலிருந்து அகற்றும் சாதனம் உள்ளிட்டவை ஹைலைட்டாக கூறலாம்.

மும்பை- கோவா இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பெட்டிகள் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. ஆனால், சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப்பில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரை இயக்குவதற்கான விசேஷ கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தற்போது தண்டவாளங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின்படி, மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும். சென்னை - மதுரை இடையே சராசரியாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும்.

தேஜஸ் ரயில் பெட்டிகளில் ஸ்டெயிலெஸ் ஸ்டீல் பிரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகை பிரேக்குகள் மிகவும் சிறப்பான செயல்திறனுடன் இருக்கும். எனவே, அதிவேகத்தில் இயக்கும்போதும் மிக குறைவான தூரத்திலேயே ரயிலை நிறுத்தும் வாய்ப்பு ஓட்டுனர்களுக்கு கிடைக்கும்.

சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஆறரை மணிநேரத்தில் மதுரையை அடையும். மீண்டும் இரவு சென்னைக்கு திரும்பிவிடும். அதாவது, சதாப்தி ரயில்களை போலவேதான் இயக்கப்பட இருக்கிறது. முதலில் சிறப்பு ரயிலாகவும், வரவேற்பை பொறுத்து வாரத்தில் 5 நாட்கள் வழக்கமான ரயிலாகவும் இயக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.

கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும். ஆனால், அதற்குரிய பல சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால், ரயில் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - மதுரை இடையே அடிக்கடி பயணிப்போருக்கு இந்த ரயில் வரப்பிரசாதமாக அமையும்.


Click it and Unblock the Notifications