சென்னையை கலக்கும் ‘கொரோனா தடுப்பூசி’ ஆட்டோ!! தனி நபரது விழிப்புணர்வு பயணம்!
கொரோனா தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னையை சேர்ந்த கலைஞர் ஒருவர் ஆட்டோவை தடுப்பூசி விழிப்புணர்வு வாகனமாக மாற்றியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், குழாய் மற்றும் ஒட்டு மரப்பலகைகளின் மூலம் புதிய பொருட்களை உருவாக்கும் கலை நிறுவனம் ஒன்றின் நிறுவனர் பி.கௌதம். இவர் தான் இந்த கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

இளம் நீல நிற பெயிண்ட்டை இந்த ஆட்டோ ரிக்ஷாவிற்கு வழங்கியுள்ள இவர், ஆட்டோவை சுற்றிலும் அட்டைகளை ஊசி போன்று கத்தரித்து பொருத்தியுள்ளார். அதேநேரம் ஆட்டோவின் மேற்கூரையில் பெரிய அளவிலும், முன் ஹெட்லைட்டின் மீது சிறிய அளவிலும் தடுப்பூசி குப்பியின் போலி மாதிரியை பார்க்க முடிகிறது.

இவற்றுடன் இது கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் முன்பக்கத்தில் சிறிய பேனர் ஒன்று மாட்டப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்களை தெரிவிக்க ஒலிப்பெருக்கி ஒன்றும் இந்த ஆட்டோவில் உள்ளது.

இந்த ஆட்டோ தோற்றத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பே கார்ப்பரேஷனுக்கு வழங்கி இருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆட்டோவை இவ்வாறான வடிவமைப்பிற்கு கொண்டுவர எனக்கு பத்து நாட்கள் தேவைப்பட்டது என கௌதம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆன செலவு மொத்தத்தையும் மணி என்ற உள்ளூர் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஏற்று கொண்டுள்ளார். மேலும் மணி தான் இந்த விழிப்புணர்வு ஆட்டோ வாகனத்தை 15 பகுதிகளுக்கு விழிப்புணர்வை ஒலித்தவாறு கொண்டு சென்று வருகிறார்.

எல்லா மக்களாலும் சமூக வலைத்தளங்களின் மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வை பெற முடியாது. அவர்களுக்காகவே இந்த வாகனம். சாதாரண ஆட்டோவில் சென்றப்படி விழிப்புணர்வை தெரிவித்தால் மக்களிடையில் அது கவனத்தை அவ்வளவாக பெறுவதில்லை.

ஆனால் இவ்வாறான வடிவமைப்பில், கண்ணை கவரும் நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆட்டோ பொது மக்களை ஈர்க்கிறது. அதனால் ஆட்டோவில் என்ன கூறியப்படி செல்கின்றனர் என சிலர் கேட்க துவங்குகின்றனர் என்றும் கௌதம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆட்டோவில் சென்றப்படி மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் கௌதம் மற்றும் அவரது குழுவினர் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதுபோன்ற மேலும் சில ஆட்டோகளையும் உருவாக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். இதற்காக தொழில் நிறுவனங்களின் உதவி அவருக்கு தேவைப்படுகிறது.
தற்போது 'கொரோனா தடுப்பூசி' ஆட்டோவின் மூலம் சென்னை மக்களை கவர்ந்துள்ள கௌதம் இதற்கு முன் கடந்த ஆண்டு மத்தியிலும் சென்னை போலீஸாருக்கு 'கொரோனா' ஹெல்மெட்களை வழங்கி இருந்தார். இந்த ஹெல்மெட்கள் அந்த சமயத்தில் மிகவும் வைரலாகின.


Click it and Unblock the Notifications