இப்படி எல்லாம் கூட காரை திருடீட்டு போறாங்களா! சென்னையில் நடந்த சம்பவத்தால் தமிழ்நாடே ஆடி போயிருச்சு!
இந்தியர்கள் வீட்டிற்கு அடுத்தபடியாக செய்யும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக கார் (Car) உள்ளது. அப்படிப்பட்ட கார் திருடப்பட்டால், யாருக்காக இருந்தாலும் வருத்தம் ஏற்படும். எனவே காரை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மீறி கொள்ளையர்கள் காரை திருடி சென்று விடுகின்றனர்.
இதை தடுப்பதற்காக கார் உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் கொள்ளையர்கள் புதுப்புது யுக்திகள் மூலம் கார்களை திருடுவதால், உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதை இன்னும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த சூழலில் சென்னை (Chennai) நகரில் நடைபெற்றுள்ள ஒரு கார் திருட்டு சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த சுமத்ரா தங்கஜோதி என்பவர், சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு (Marina Beach) குடும்பத்துடன் காரில் வந்திருந்தார். அப்போது கார்களை நிறுத்தும் இடத்தில், பார்க்கிங் செய்ய முயன்றார். அந்த சமயத்தில் சென்னை மாநகராட்சி ஊழியரை போல் உடை அணிந்த ஒருவர் அங்கு வந்து ரசீது கொடுத்துள்ளார்.
எனவே சுமத்ரா தங்கஜோதி குடும்பத்தினர், அவரை உண்மையிலேயே சென்னை மாநகராட்சி ஊழியர் என நினைத்து விட்டனர். ஆனால் நடந்ததோ வேறு. சிறிது நேரத்தில், காரை இங்கு நிறுத்த கூடாது, வேறு இடத்தில்தான் நிறுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். அத்துடன் கார் சாவியையும் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய சுமத்ரா தங்கஜோதி குடும்பத்தினர், சாவியை அவரிடம் வழங்கியுள்ளனர். இதற்காகவே காத்திருந்த அந்த நபர், சுமத்ரா தங்கஜோதி குடும்பத்தினர் கண் முன்பாகவே காரை திருடி விட்டு தப்பியுள்ளார். அவர் திரும்பி வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுமத்ரா தங்கஜோதி, காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் காவல் துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காரை திருடி சென்ற நபர், சென்னை மாநகராட்சி ஊழியர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி ஊழியர்களை போல் உடையணிந்து கொண்டு, அவர் ஏமாற்றியுள்ளார்.
இந்த சம்பவம், சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டால், இதுபோன்ற இன்னும் பல்வேறு நூதன மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நபர் திருடி சென்றது, டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் ஆகும்.
இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று. அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணம் செய்ய டொயோட்டா இன்னோவா காரை தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் சுமத்ரா தங்கஜோதி குடும்பத்தினர் சென்னைக்கு வந்தபோதுதான், கார் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய அதிநவீன உலகில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வந்து விட்டன. ஜிபிஎஸ், குறிப்பிட்ட எல்லையை தாண்ட முடியாத வகையில் நிர்ணயம் செய்தல் போன்ற தொழில்நுட்பங்களை கார் உரிமையாளர்கள் முழுமையாக பயன்படுத்த தொடங்கினால், இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க முடியும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications