சென்னை மெட்ரோவில் டிக்கெட் விலை ரூ5 தான்! என்னிக்கு, எப்படி எடுக்கனும் தெரியுமா?
சென்னை மெட்ரோ நிறுவன தினத்தை முன்னிட்டு அன்றைய நாளில் சென்னை மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளிடம் வெறும் 5 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தை எப்படி பெறுவது என்ற விரிவான விபரத்தை தான் இங்கே நாம் காண போகிறோம்.
சென்னையில் மெட்ரோ ரயில் தற்போது முக்கிய பயன்பாட்டில் இருக்கிறது. சென்னை நகருக்குள் பயணிக்க மக்கள் மெட்ரோ ரயில் அதிகம் விரும்பி வருகின்றனர். சென்னையில் ஏற்கனவே எலெக்ட்ரிக் ரயில்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வையும் அதே நேரம் மக்கள் மத்தியில் டிஜிட்டல் டிக்கெட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஒரு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு நாள் திட்டமாக வரும் டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் இ-க்யூ ஆர் டிக்கெட், ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம் வாட்ஸ்அப் மற்றும் போன்பே ஆகியவற்றின் மூலம் டிக்கெட் எடுத்தால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ5 மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக பயணிகள் மத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வைப்பதற்காக இந்த முயற்சியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.

அதே நேரம் ஏற்கனவே உள்ள சில டிஜிட்டல் பேமனட்களான சிங்கார சென்னை கார்டு, டிராவல் கார்டு, மொபைல் ஆப், பேப்பர் கியூ ஆர் ஆகியவற்றின் மூலம் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை கட்டணம் என்பது வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு எளிமையான மெட்ரோ போக்குவரத்து என்பது கிடைக்கும் என மெட்ரோ போக்குவரத்து நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ போக்குவரத்தின் செயல்பாட்டு அதிகாரி ராஜேஷ் சதுர்வேதி கூறும் போது " நாங்கள் ஒரு முக்கியமான மைல் கல்லை கொண்டாடுகிறோம். இதனால் சென்னை மக்களுக்கான எங்கள் நன்றியுணர்வை காட்ட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். எங்கள் வெற்றிக்கு சென்னை மக்கள் தான் மிக முக்கியமான காரணம்.

இதனால் ஒருநாள் சிறப்பு கட்டணமாக மக்களின் பங்களிப்பையும் டிஜிட்டல் பணியையும் ஊக்குவிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூபாய் 5 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த பகுதியில் இருந்து எங்கு டிக்கெட் எடுத்தாலும் ரூபாய் 5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 ரூபாய் சிறப்பு கட்டணம் என்பது டிசம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளைக்கு மட்டுமே செல்லுபடி ஆகக்கூடியதாகவும் இது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் இதை செய்ய முன்வந்துள்ளது. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் நிச்சயம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை மெட்ரோ என்பது இரண்டு வழிப்பாதைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ஏர்போர்ட்டில் இருந்து விம்கோ நகர் வரையிலும். சென்னை பரங்கி மலையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும் என இரண்டு விதமான ரயில் பாதைகள் இருக்கிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இதுபோக அடுத்தடுத்து ஏற்கனவே இருக்கும் லைன்களை நீட்டிக்கும் பணிகளும் புதிதாக மெட்ரோ பாதையை கட்டமைக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பணியாக முடிவடைய முடிவடைய அந்தந்த பகுதி எல்லாம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னை மாநகரில் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கப்பட்டு விடும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மக்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க இப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்ட நெரிசல் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தங்கள் செல்போன் மூலமே டிக்கெட் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









