சேலம் மெட்ரோ ரயில் வரப்போற ரூட் இது தான்! எல்லா ஏரியாவையும் கவர் பண்ணீட்டாங்களே!
சென்னை மெட்ரோ நிர்வாகம் தமிழகத்தின் முக்கிய மூன்று நகரங்களில் ரேப்பிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கைகள் எல்லாம் தயாராகி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்தின் இந்த மூன்று நகரங்களும் சிங்கப்பூர் போல மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டின் டயர் 2 நகரங்களில் மெட்ரோ கட்டமைப்பு உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. மேலும் வாய்ப்புகள் உள்ள இடத்தில் மெட்ரோ பணிகளை துவங்கவும் உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் மதுரை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் மெட்ரோ பணிகளுக்கான திட்டங்கள் வரைவு செய்யப்பட்டு மெட்ரோ பணிகளும் தற்போது துவங்கி உள்ளன.

முதல் கட்டமாக இந்த இரு நகரங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மெட்ரோ பாதைகளை அமைக்கும் பணியும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அடுத்ததாக மூன்று நகரங்களில் மெட்ரோ திட்டங்களை கொண்டு வருவதற்கான ஆய்வுகளை செய்ய துவங்கியது.
சேலம் திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயிலை கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதன்படி அந்தந்த நகரங்களின் கட்டமைப்புகள் மெட்ரோ பாதைகளை உருவாக்குவதற்காக உள்ள வழிகள், மெட்ரோ பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் சமீபத்தில் தமிழ்நாடு சிறப்பு திட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா என்பவரை சந்தித்து தமிழகத்தில் உள்ள சேலம்ல திருநெல்வேலில திருச்சி ஆகிய பகுதிகளில் மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்படி இந்த மூன்று நகரங்களிலும் விரைவில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக சேலம் மாநகரில் தான் மெட்ரோ பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை கோவையை தொடர்ந்து சேலத்திலும் விரைவில் மெட்ரோ பணிகள் துவங்க உள்ளது. சேலத்தில் எந்தெந்த பாதையில் எல்லாம் மெட்ரோ ரயில் வரப்போகிறது என்ற முக்கியமான தகவல் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.
சேலத்தை பொறுத்தவரை இரண்டு பாதைகளில் மெட்ரோ ரயில்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 35.19 கிலோ மீட்டர் தொலைவில் மெட்ரோ பாதைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. சேலம் மாநகரில் ஏற்கனவே பாலங்கள் அதிகமாக இருப்பதால் அங்கு மெட்ரோ பணிகளை எப்படி செய்ய முடியும் என அதிகாரிகள் சற்று கடினமான முறையில் யோசித்து ஆலோசனைகள் நடத்தினர் இருந்தாலும் எந்த பாலத்திற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் மெட்ரோ பணித்திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
முதல் ரூட்டாக சேலம் கருப்பூரிலிருந்து நல்லிக்காலப்பட்டி வரை மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதை சேலம் ரயில்வே ஸ்டேஷன், மாமாங்கம் நால்ரோடு, கலெக்டர் ஆபீஸ், பழைய பஸ் ஸ்டாண்ட் , தாசநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் படி கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது ரூட்டாக அயோத்திபட்டிணம் முதல் உத்தமசோழபுரம் வரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாதை மணியனூர், அம்மாபேட்டை, உதயா பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இதில் எந்த பாதை வழியாக மெட்ரோ பாதை அமைக்கப்படும் மற்றும் எந்தெந்த பகுதியில் எல்லாம் மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்ற விபரங்கள் எல்லாம் இனிமேல் தான் முடிவு செய்யப்படும்.
முதல் கட்டமாக கருப்பூர் முதல் நல்லிக்காலப்பட்டி வரையிலான மெட்ரோ பாதையை அமைக்கப்படும் என்றும், அந்தப் பாதைக்கான பணிகள் முடிவடையும் தருவாயில் தான் இரண்டாம் கட்டமாக அயோத்திபட்டிணம் முதல் உத்தமசோழபுரம் வரை மெட்ரோ பாதை அமைக்கும் பணி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணி துவங்கவுள்ளது.
சேலம் மாநகரின் வளர்ச்சியை கணக்கிடும் போது அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த மெட்ரோ பாதை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த திட்டம் விரைவாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் பகுதியில் மெட்ரோ பாதை அமைப்பதற்கான திட்டங்கள் வரைபடங்கள் அதற்கான பிளானை உருவாக்க தனியார் நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது அதன்படி ரூபாய் 38 கோடி மதிப்பீட்டில் இதற்கான முழு திட்டங்களும் வரைபடங்களும் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவிஸ்பார்க் கருத்து: சேலத்தை தொடர்ந்து திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் மெட்ரோ ரயில் கொண்டு வர தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் அளித்த ரிப்போர்ட்டின் படி இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்த கட்ட பணிகள் தொடங்கும். இந்த இரு நகரங்களிலும் எந்தெந்த பாதையில் மெட்ரோ ரயில்கள் வரப்போகிறது என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications