தரமான சம்பவத்தை நிகழ்த்திய மெட்ரோ ரயில் நிர்வாகம்... இனி சென்னை வாசிகள் இதற்காக திண்டாட தேவையில்லை!
மக்களை கவரும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், வாகன ஓட்டிகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக நிலவி வந்த ஒன்றை நிறைவேற்றும் வகையிலான செயலை அது செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கு பதிலாக மின்சார வாகனங்களை மக்கள் மத்தியில் திணிக்கின்ற வகையிலான முயற்சிகள் அண்மைக் காலங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள் நாம் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவற்றினால் உருவாகும் பக்கவிளைவுகள் குறித்த தகவல் நம்மிடையே எப்போதும் திகிலை ஏற்படுத்துகின்ற வகையிலேயே அமைகின்றது.

அதுமட்டுமின்றி, எரிபொருள் வாகனங்களை பராமரிக்கும் செலவு அதிகம். ஆனால், மின்சார வாகனம் குறைந்த செலவில் அதிக லாபத்தை வழங்கக் கூடியவை. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க குறைந்தது ரூ. 5ல் இருந்து ரூ. 100 வரை செலவாகும் வாய்ப்பு உள்ளது. இதை நாங்கள் மிகவும் தோராயமாகதான் கூறுகின்றோம். இது சில வாகனங்களில் மாறுபடலாம்.

ஆனால், மின்சார வாகனங்களில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வெறும் பைசா கணக்கிலேயே செலவாகின்றது. அதுமட்டுமின்றி, இந்த வாகனங்களின் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பின்விளைவும் ஏற்படுவதில்லை.
ஆகையால், எலெக்ட்ரிக் வாகனங்களை எப்படியாவது மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் தற்போதுவரை அதிகளவில் புழக்கத்தில் வராமல் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, மின்சார வாகனங்களின் அதிகபட்ச விலை மற்றும் சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை.

முதலாவதாக கூறப்பட்ட காரணத்தை தகர்க்கும் வகையில், அரசு மின்வாகனங்களுக்கான மானிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், மக்கள் மின்சார கார்களை வாங்க தயங்குகின்றனர். ஏனென்றால், அடுத்ததாக உள்ள சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறையே தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஆகையால், தற்போது நாட்டில் செயல்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளுக்கு இணையான அளவில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் வரும்பட்சத்தில், மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் ஒதுங்குவார்கள் என தெரிகின்றது.
எனவே, நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான போதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகின்றது.

அரசின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் சில தனியார் நிறுவனங்களும் தங்களின் பங்கினை வகித்து வருகின்றனர். அந்தவகையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் இந்த பணியில் இணைந்துள்ளது.
இதன் ஒரு பங்காக, சென்னை வாசிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தனது முக்கியமான ரயில் நிலையங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைக்கும் விதமான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில், சார்ஜிங் நிலையத்தை அறிமுகம் செய்துள்ளது.
மெட்ரோ ரயில் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமான பல்வேறு முயற்சிகளில் அதன் நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே, இந்த சார்ஜிங் நிலையமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், அடுத்தடுத்தாக அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் சார்ஜிஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பயணிகள் தங்களது மின்சார வாகனங்களை இனி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சார்ஜ் செய்துகொள்ளலாம். இதற்காக எலெக்ட்ரீஃபி "ELECTREEFI" என்ற ஆப்-பினை தரவிறக்கும் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.
மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, ரயில் நிலையங்களில் உள்ள சார்ஜிங் நிலையத்தை பயன்படுத்த எலெக்ட்ரீஃபி ஆப்-பில் பதிவு செய்வது கட்டாயம் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, காத்திருப்பை தவிர்ப்பதற்காக இந்த பதிவு முறையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு வாகனம் சார்ஜ் குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுத்துக்கொள்ளும். அதுவரை அடுத்த மின்சார வாகனத்தின் உரிமையாளர் காத்திருக்கும் சூழல் ஏற்படும். எனவே, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் பதிவு செய்து செல்லும் பட்சத்தில் அந்த காத்திருப்பு தவிர்க்கப்படுகின்றது.

மெட்ரோ நிர்வாகத்தின் இந்த சிறப்பான நடவடிக்கை சென்னை வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான கட்டணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. அவை, எலெக்ட்ரீஃபி ஆப்பில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








