அடிச்ச வெயிலுக்கு எல்லாரும் வீட்டுல உட்காந்துட்டாங்க! சென்னை மெட்ரோல குறைந்த பயணிகள் எண்ணிக்கை!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை மெட்ரோவில் கடந்த ஏப்ரல் மாதம் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது ஒரே மாதத்தில் 5.94 லட்சம் பயணிகள் குறைவாக பயணம் செய்துள்ளார்கள். பல்வேறு காரணங்களால் இந்த பயணிகள் எண்ணிக்கை குறைவு என்பது ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ பயன்பாடு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நகருக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல மெட்ரோ மிக பயனுள்ளதாக இருக்கிறது. சென்னையை பொருத்தவரை இரண்டு ரூட்களில் மெட்ரோ செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 85.5 லட்சம் பயணிகள் பயணம் செய்திருந்தார்கள். அதன் பிறகு நவம்பர் மாதம் 80.01 லட்சம் பயணிகள் பயணம் செய்தார்கள். அப்பொழுது ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகளின் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு மெல்ல மெல்ல பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்திருந்தார்கள். இந்நிலையில் ஏப்ரல் மாதம் துவங்கியது முதல் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் மொத்தமே 80.87 லட்சம் பயணிகள் மட்டுமே சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளார்கள். 5.94 லட்சம் பயணிகள் குறைவாக பயணம் செய்துள்ளார்கள்.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக சென்னை கோயம்பேட்டில் இருந்த பஸ் ஸ்டாண்ட் அகற்றப்பட்டு கிளாம்பாக்கம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதால் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை தினசரி 6000 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளில் கோடை விடுமுறை விட்டதால் தினமும் வேலைக்கு செல்லும் பலர் கோடை விடுமுறைக்காக விடுமுறை எடுத்துவிட்டு வெளியூர் சென்றதால். பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. சென்னை மெட்ரோவை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தினந்தோறும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் அந்த பகுதியில் மெட்ரோ வசதி இல்லை. சென்னை கிளாம்பாக்கம் மற்றும் சிறுசேரி ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு முடிந்தன. இந்த ஆய்வு முடிவுகள் நெகட்டிவாக அமைந்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் மற்றும் சிறுசேரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமில்லை என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு கிளாம்பாக்கம் மற்றும் சிறுசேரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் போடப்பட்ட திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இதனால் சென்னை கிளம்பாக்கம் பகுதிக்கு தற்போது மெட்ரோ வசதி ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் திறந்தது சென்னை மெட்ரோவிற்கு பயணிகள் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இது பெரிய அளவிலான பாதிப்பு கிடையாது. தற்போது ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான பாதிப்பிற்கு முக்கியமான காரணம் கோடை விடுமுறை தான். இதனால் இந்த மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் மீண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் மெட்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது மக்கள் மத்தியில் போதிய அளவில் வரவேற்பு இல்லை இதற்கு முக்கியமான காரணம் பொது போக்குவரத்து இருக்கும் இடங்களில் மெட்ரோவை மக்கள் பயன்படுத்தினால் பொது போக்குவரத்தை விட மெட்ரோவிற்கு அதிகமான தொகை கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது கூட்ட நெருக்கடி, டிராபிக் காரணமாக மெட்ரோ சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என மக்கள் பலர் மெட்ரோவுக்கு மாறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications









