அன்று தாயை காப்பாற்ற ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை... இன்று ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் சென்னை GH வாசலில் அவரது மகள்...!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் ஆட்டோ ஓட்டும் பெண் ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். யார் அவர்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலினை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல ஹீரோக்கள் ஆங்காங்கே உருவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நேரடியாக தற்போதைய சூழலினால் பாதிக்கப்பட்டவர்களே.

ஏனெனில் தான் பெற்ற துயரத்தை வேறு யாரும் பெறக்கூடாது என்பதற்காக தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி வருகின்றனர். அவ்வாறு கொரோனாவினால் தாயை இழந்த 36 வயதான ஆர்.சீதா தேவி என்பவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வருபவர்களுக்காக ஆக்ஸிஜன் ஆட்டோவை இயக்கி வருகிறார்.

இவர் கடந்த மே 1ஆம் தேதி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 65 வயதான தனது தாயை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் போதிய படுக்கை வசதி கிடைக்காததினால் வெளியே காத்திருந்துள்ளனர்.
பிறகு அருகில் உள்ள மற்றொரு அரசு பொது மருத்துவமனையான ஸ்டான்லியில் இடம் கிடைத்தாலும், சீதா தேவியால் தனது தாயை காப்பாற்ற முடியவில்லை. இதற்காக அவர் யார் மீதும் கோபப்படவில்லை, தனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று மட்டுமே சிந்தித்தார்.

இதனால் தான் தனது தாய் உடன் மணிக்கணக்கில் நின்று கொண்டிருந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டரை கொண்ட ஆட்டோ உடன் தன்னால் முடிந்த அளவிற்கு மற்ற உயிர்களை காப்பாற்ற, பெண் தெய்வம் போல் நின்று கொண்டிருக்கிறார்.
சரியான நேரத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைத்திருந்தால் தனது தாயை காப்பாற்றி இருக்க முடியும் என மிகுந்த மன வேதனையுடன் பேச ஆரம்பித்த சீதா தேவி, ஸ்ட்ரீட் விஷன் என்கிற பெயரில் சமூக தொண்டு அறக்கட்டளை ஒன்றை நிர்வகித்து வருகிறது.

திருநங்கைகள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் உதவியுடன் இந்த அறக்கட்டளையை நடத்திவரும் சீதா தேவி கொரோனா காலத்திற்கு முன் தனது பகுதியில் இருக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு இலவசமாக ட்யூஷன் நடத்துவது என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார்.
தங்குவதற்கு வீடு இல்லாமல் இருப்போரை மீட்பதற்கு ஆட்டோ ரிக்ஷா ஒன்று இவர்களிடம் உள்ளது. அதுதான் தற்போது ஆக்ஸிஜன் ஆட்டோவாக உருமாறியுள்ளது. கடந்த மே 6ஆம் தேதியில் இருந்தே இந்த சமூக பணியில் இறங்கிவிட்டதாக கூறும் சீதா தேவி, அவசரமாக ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு தனது ஆட்டோவில் அமர வைத்து ஆக்ஸிஜன் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் சீதா தேவியின் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் மூலம் கிட்டத்தட்ட 300 நபர்கள் பயனடைந்துள்ளனர். "சமீபத்தில் மிகவும் குறைவான ஆக்ஸிஜன் நிலையுடன் பெண் ஒருவர் எங்களிடம் அழைத்துவரப்பட்டார். ஆக்ஸிஜன் வழங்கப்பட்டதற்கு பிறகு அவரது நிலைமை சற்று சீரானது.
அதன் பிறகு அவர் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் எனது அம்மாவை போல் இருந்தார் என ஏகப்பட்ட நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட சீதா தேவி தற்போது இந்த ஆக்ஸிஜன் ஆட்டோவை இயக்க பண தேவையில் சிக்கி தவித்து வருவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








