நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே... போலீஸ் காருக்கே அபராதம் போட்ட போலீசார்! இது செம மேட்டரா இருக்கே!
சென்னையில் போலீசார் வாகனத்திற்கு டிராஃபிக் போலீசாரே அபராதம் விதித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
சாலைகளில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களைப் போக்குவரத்து போலீசார் கண்காணித்து அதற்கு அபராதங்களை விதித்து வருகின்றனர். தற்போது பல முக்கிய சாலைகளில் இந்த கண்காணிப்பில் தானியங்கி கேமராக்களும் செயல்பட்டு அபராதங்களை விதித்து வருகின்றன.

இப்படியாகப் பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் போது எல்லாம் மக்களிடம் உள்ள மிகப்பெரிய புலம்பல் என்னவென்றால் இந்த விதிகள் எல்லாம் மக்களுக்குத்தான் போலீசார்கள் விதிமீறினால் யார் தண்டிப்பது உள்ளிட்ட கேள்விகள் எல்லாம் எழும். ஆனால் சமீபத்தில் போலீஸ் வாகனம் ஒன்றே சாலை விதிமுறைகளை மீறி பயணம் செய்துள்ளது.
அரவிந்த் ஆர்கே என்ற நபர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு 3 ஸ்டார் அந்தஸ்து கொண்ட போலீஸ் கார் அதாவது ஏடிஜிபி அந்தஸ்து கொண்ட போலீசார் பயன்படுத்தும் ஒரு கார் ஒன்று ஒரு வழிபாதையில்அதாவது சாலையின் ராங் ரூட்டில் சென்று கொண்டிருந்தது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட அரவிந்த் இந்த காரின் எண்ணைப் பதிவிட்டு போலீஸ் கார்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் இந்த ட்விட்டர் பதிவில் தமிழ்நாடு போலீஸ், சென்னை போக்குவரத்து போலீஸ், சென்னை கார்பரேசன் டிராஃபிக் போலீஸ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவுகளைக் குறிப்பிட்டு அவர்களை டேக் செய்து பதிவுகளைப் போட்டிருந்தார். இந்த பதிவிற்கு பதிலளித்த சென்னை பெரு நகர போலீசார் குறிப்பிட்ட வாகனத்தை ஓட்டிய டிரைவருக்கு ரூ500 அபராதம் விதிக்கப்பட்டு செல்லான் வழங்கப்பட்டுள்ளதாகவும். மீண்டும் இந்த தவறை செய்யக்கூடாது என அவரை எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிட்டு அந்த செல்லானின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தனர்.
இந்த ட்விட் வைரலாக பரவி வருகிறது. போலீசாரே சில இடங்களில் சட்டத்தை மீறும் போது அவர்களுக்குத் தண்டனையில்லையா என மக்களின் குரலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவான்மியூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது போல் கண்காணிப்பு இல்லாத பகுதிகள் அல்லது போலீசார் இல்லாத பகுதிகளில் ஏதேனும் சாலை விதிமீறல் நடந்தால் அதற்கான ஆதாரத்தைப் பொதுமக்களே அரசுக்கு வழங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மக்களே இன்று செல்போன்களை பெரும்பாலும் கையில் வைத்திருக்கும் நிலையில் அவர்களே செல்போனில் தகுந்த ஆதாரங்களை வழங்கலாம் எனப் பலர் கருதுகின்றனர்.
இந்த தளம் தயாராகிவிட்டால் சாலை விதிமுறை மீறல் மிகவும் குறையும். மக்களும் வேண்டுமென்றே சாலை விதிமுறைகளை மீறுவதை நிறுத்திவிடுவர். எங்கிருந்து யார் வேண்டுமானாலும் சாலை விதிமுறைகளைப் புகாராகப் பதிவு செய்ய முடியும் என்பதால் மக்கள் பலர் இதை விரும்புகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








