சென்னை காவல்துறை போட்ட புதிய உத்தரவு.. வாகன உரிமையாளர்கள் எல்லாரும் ஹேப்பி ஆயிட்டாங்க!
வாகனம் வாங்குவது மிக சுலபம் என கருதப்படும் இந்த காலகட்டத்திலும் நம்மில் பலர் இப்போதும் வாகனம் இன்றி தங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். குடும்ப சூழல், குறைவான வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலருக்கு வாகனம் என்பது வெறும் கனவாகவே இருக்கின்றது.
மேலும், தங்களின் அவசர வாகன தேவைகளுக்கு நண்பர்களின் உதவியையே அவர்கள் நாடி இருக்க வேண்டி இருக்கின்றது. இந்த மாதிரியான நண்பர்களுக்கு வண்டியை கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காமல் இருந்தாலும் சிக்கல். ஆமாங்க, வண்டிய வாங்கிட்டு போற நம்ம பசங்க போற போக்குல நம்மல போலீஸ் கிட்ட கோத்துவிட்டு போய்ருவாங்க.

டிராஃபிக் ரூல்ஸை சுத்தமா மதிக்க மாட்டாங்க, சிக்னல்ல நிக்கவே மாட்டாங்க. மேலும், தலையில ஹெல்மெட்டுன்றதையே போட மாட்டாங்க. இதுபோதாதுனு வேணும்னே ட்ரிபிள்ஸ், 4ஸ்னு ஸ்டண்ட் எல்லாம் நடு ரோட்டுல காமிப்பாங்க. இதன் பின்விளைவு, வண்டியோட ஓனரான நம்ம வீட்டுக்கு அபராத செல்லாண் தேடி வரும்.
இந்த மாதிரி நண்பர்கள் செஞ்ச தப்புக்கு தேவையே இல்லாம நாம அபராதத்தை தண்டமா கட்டி அழ வேண்டி இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து வாகன உரிமையாளர்களைக் காக்கும் விதமாகவே சென்னை போக்குவரத்து காவல்துறை ஓர் சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

இனி உங்கள் நண்பர்கள் செஞ்ச தப்புக்கு வாகன உரிமையாளர்களாகிய நீங்க அபராதம் கட்ட வேண்டாம். இவ்வாறே அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டி மீதே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புதிய சட்ட விதியையே சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம் செய்திருக்கின்றது. நம்மில் பலர் சொந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, எதுக்கு வம்பு என நினைத்து அனைத்து ரூல்ஸ்களையும் ஃபாலோ செய்வோம். ஆனால், நம்மிடம் இருந்து வாகனத்தை கடன் வாங்கி செல்லும் நபர்களும் அப்படியே நடந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அவர்களை பொருத்தவரை "எவன் எப்படி போன நமக்கு என்ன" என்றே செயல்படுவார்கள். இதன் விளைவாகவே போற போக்கில் அபராத செல்லாணில் நம்மை கோர்த்துவிட்டு போய் விடுவார்கள். இதனால், கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டோர் பலர் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே விதிமீறலில் ஈடுபடும் நபர் மீதே அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற புதிய விதியை காவல்துறை அறிமுகம் செய்திருக்கின்றது.
அதேவேளையில், இது நம்முடைய தவறு அல்ல வாகனத்தை கடனாக வாங்கிச் சென்றவரின் தவறு, என காவல்துறையிடம் நாம் விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்யும்பட்சத்திலேயே அபராதத்திலும், போலீஸின் நடவடிக்கையில் இருந்தும் உங்களால் தப்பிக்க முடியும். போக்குவரத்து விதிமீறல்களை கண்கானிக்கும் பொருட்டு சென்னை நகரத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இது ஓர் நவீன ரக கேமிராக்கள் ஆகும். மேலும், வாகனம் என்ன வேகத்தில் சென்றாலும் அதன் நம்பர் பிளேட்டை துள்ளியமாக அதனால் படம் பிடிக்க முடியும். இந்த திறனுக்காக, கேமிராவில் Automatic Number Plate Recognition அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆகையால், விதிமீறல் வாதிகளால் போலீஸின் இந்த வலையில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினம்.
ஃபோட்டோ எடுப்பதுடன் தானாக அபராத செல்லாணும் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். இத்தகைய அபராத செல்லாணை நீங்கள் பெற்றிருப்பீர்கள் எனில் அபராதத் தொகையை ஆன்-லைன் வாயிலாக செலுத்திக் கொள்ள முடியும். ஒருவேளை அந்த விதிமீறலில் நீங்கள் ஈடுபடாமல், உங்களிடம் இருந்து வாகனத்தை இரவல் வாங்கிச் சென்ற நபர் ஈடுபட்டு இருந்தால், அவரை போலீஸிடம் கோர்த்துவிட்டு நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
இதற்காக மாநில உள்துறை மோட்டார் வாகன விதி 1989 இல் திருத்தம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஓர் வாகனத்தின் உரிமையாளர் எந்த விதியையும் மீறவில்லை எனில், அந்த வாகனம் வேறொரு நபரால் ஓட்டப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதையே இந்த விதி கூறுகின்றது.
இதன் வாயிலாக அப்பாவியான நீங்கள் தற்போதைய உச்சபட்ச அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். காவல்துறை நீங்கள் வழங்கிய தகவலை ஏற்றுக் கொள்ளும் எனில் உங்கள் பெயரில் போடப்பட்ட அபராத செல்லாணை ரத்து செய்துவிட்டு, உண்மையான குற்றவாளியின் பெயரில் அபராத செல்லாணை வழங்கும்.
வாகன நம்பர் பிளேட்டை கண்டறியும் கேமிராவுடன் சேர்த்து நகரத்தின் பல்வேறு சாலைகளில் வாகனத்தின் வேகத்தைக் கண்டறியும் டிஜிட்டல் போர்டுகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அவை, உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கண்டறிந்து எச்சரிக்கைச் செய்யும். அதேவேளையில், அதிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த போர்டின் தரவுகளின் அடிப்படையில் அபராத செல்லாண் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து விதிமீறல்களால் காரணமாக நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விதிமீறலைக் குறைக்கும் பொருட்டு புதிய விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறல்களையும், விபத்துகளின் எண்ணிக்கையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications