டூ-வீலர்ல டிராவல் பண்ண போறீங்களா... புதிய கட்டுப்பாடுகள் போட்டிருக்காங்க..! என்ன தெரிஞ்சிட்டு போங்க!!
வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இன்றும், நாளையும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், டூ-வீலரில் சென்னையில் பயணிப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிர தன்மையுடன் பரவி வருகின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பகுதியாக கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற கெடுபிடிகள் காரணமாக வைரஸ் பரவும் வேகம் கணிசமாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மக்கள் மத்தியில் லேசான மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், நோய் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருப்பதாக அதிர்ச்சிமிகுந்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்தமாதிரியான நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. மே24ம் தேதியோடு நிறைவடைய இருந்த ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறைச்சார்ந்தோருடன் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க அறிவுறுத்தியநிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாகனங்களில் வெளியில் செல்வோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சென்னைக் காவல்துறையினர் வழங்கி வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் ஒருத்தருக்கு மேல் பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகர் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குடும்பத்தினராகவே இருந்தாலும் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணிக்கக் கூடாது என்பதே இதன் முக்கிய இலக்காகும்.

ஆகையால், பொண்டாட்டி, பிள்ளை, அம்மா, அப்பா, தங்கை என யாராக இருந்தாலும் பைக்கில் ஒருவருக்கு மேல் இருக்கவே கூடாது என சென்னை போலீஸ் கெடுபிடி காட்டத் தொடங்கியிருக்கின்றது. அதேசமயம், அத்தியாவசிய இருசக்கர வாகனத்தில் வெளியில் வருபவர், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆகையால், தேவையின்றி வருபவர் ஒற்றை நபராக இருந்தாலும் அவர் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வாகன பறிமுதல் அல்லது உச்சபட்ச அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இதேபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் (மே22), நாளையும் மட்டும் தனியார் மற்றும் அரசுகள் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இத்துடன், கடைகளுக்கும் கூடுதல் நேர அனுமதி இன்றும், நாளைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது இருக்கும் புதிய இ-பதிவு முறையை ரத்து செய்துவிட்டு இ-பாஸ் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. முழு ஊரடங்கை தீவிரப்படுத்தி கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தைக் குறைக்க இம்மாதிரியான அதிரடிகளை அரசு மேற்கொள்ள இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








