சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் செக்வே ஸ்கூட்டரில் ரோந்து!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளுக்காக போலீசாருக்கு செக்வே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் பல்லாயிரணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே போலீசாருக்கு கண்காணிப்புப் பணிகளுக்கு வசதியாக செக்வே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

மிக அடக்கமான இந்த செக்வே வகை ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளில் பெரிய வணிக வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் பெரும் கல்வி நிறுவனங்களில் வளாகத்தில் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இந்த வகை ஸ்கூட்டர்களை போலீசார் ரோந்து பணிக்காக பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

இந்த செக்வே ரக ஸ்கூட்டர்களை சீனாவை சேர்ந்த ஃப்ரீகோ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பேட்டரியில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் தானியங்கி சமநிலைப்படுத்தி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இதனால், இந்த ஸ்கூட்டரில் பயணிப்பவர் கீழே விழுவதற்கான வாய்ப்பில்லை. இது சென்சார் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு இயக்கும் வகையில் உள்ளது. மேலும், நின்றுகொண்டே இயக்கும் விதத்தில் மிக அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் மணிக்கு 4 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான கூடம் மட்டுமின்றி, அனைத்து நடைமேடைகளுக்கும் இந்த ஸ்கூட்டரில் போலீசார் எளிதாக சென்று வர முடியும்.
இந்த ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 கிமீ தூரம் அல்லது 35 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த ஸ்கூட்டர் 360 டிகிரி கோணத்தில் திரும்பும் வசதியை பெற்றிருக்கிறது. மேலும், பிரச்னை தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக ரயில் நிற்கும் பகுதி மற்றும் நடைமேடைக்கு உடனடியாக செல்வதற்கான வாய்ப்பை இந்த செக்வே ஸ்கூட்டர் வழங்கும்.

மொத்தமாக ஆறு செக்வே ஸ்கூட்டர்களை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வாங்கி இருக்கின்றனர். இந்த ஆறு ஸ்கூட்டர்களும் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. இவை மிகவும் பயனுள்ளதாகவும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கும் பயனுள்ள வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த செக்வே ஸ்கூட்டர்களானது ரோந்து பணிக்காக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இதே வகை செக்வே ஸ்கூட்டர்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








