சென்னை-சேலம் விமானத்தில் பறந்த பிரபல நடிகை! இவங்களே பார்க்கவே கூட்டம் கூடியிருக்குமே!
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலிருந்து சேலத்திற்கு பயணிகள் விமான சேவை துவங்கி உள்ளது. கொரோனா மற்றும் பயணிகள் மத்தியில் போதுமான வரவேற்பின்மை இருந்துதான் காரணமாக இந்த விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் லாக்டவுனை சந்தித்தது. இதனால் பஸ் ரயில் விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து செய்த சேவைகளும் முடக்கப்பட்டன. உலகமே எங்கும் நகர முடியாமல் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நின்றது. அதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு விஷயமாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பெரும்பாலும் கொரோனா தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு விட்டது என்று சொல்லலாம்.

இந்நிலையில் கொரோனா பரவலின் போது சென்னையில் இருந்து சேலம் வரை செல்லும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்த பின்பு ஒவ்வொரு விமான சேவையாக துவங்கப்பட்ட பின்பும் சென்னை-சேலம் விமான சேவை துவங்கப்படாமல் இருந்ததே இதற்கு பயணிகள் மத்தியில் போதுமான வரவேற்பு இல்லை என்பது முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு உதான் திட்டத்தின் ஐந்தாவது வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின் படி இரண்டாம் கட்ட நகரங்களை விமானங்கள் மூலம் இணைப்பதால் அந்த நகரங்களில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதால் அந்த நகருக்கு விமான சேவையை கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

மீண்டும் துவங்கப்பட்ட சென்னை சேலம் விமான சேவையில் முதல் பயணத்தின் போது பல முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை. நடிகை நமீதா உள்ளிட்ட 54 பயணிகள் சென்னையிலிருந்து கோவைக்கு விமான மூலம் பயணித்து சென்றனர்.
மேலும் முதல் விமான சேவைக்கு வரவேற்பு வழங்கும் வகையில் சேலத்தில் தரை இறங்கிய விமானத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்பி பார்த்திபன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் பயணிகளுக்கு ரோஜா பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். மேலும் இது மத்திய அரசின் திட்டத்தின் மூலம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரளான கலந்து கொண்டனர்.

தற்போது சென்னையிலிருந்து காலை 11:20 மணிக்கு கிளம்பும் சேலம் விமானம் சரியாக சேலத்தில் மதியம் 12:30 மணிக்கு தரையிறங்குகிறது பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12:50 மணிக்கு கிளம்பும் விமானம் சரியாக மதியம் 1:45 மணிக்கு சென்னையில் தரையிறங்குகிறது. இந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த விமானத்தில் பயணிக்க தற்போது ரூபாய் 5249 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த டிக்கெட் கட்டணம் என்பது விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட நேரங்களில் மாறுதலுக்கு உட்பட்டதாகும். இந்த விமான சேவையின் மூலம் சென்னையிலிருந்து சுமார் 55 நிமிடத்தில் சேலத்திற்கு சென்று விட முடியும்.

தற்போது சென்னையிலிருந்து சேலம் செல்ல விமானத்தைத் தவிர விரைவாக செல்ல இருக்கும் ஒரே வழி வந்தே பாரத் ரயில் தான். அதன்படி இந்த ரயிலில் பயணிக்க சென்னையிலிருந்து சேலத்திற்கு சுமார் 4 மணி நேரம் வரை ஆகிறது. தற்போது இந்த விமான சேவையின் மூலம் சென்னை சேலம் இடையே உள்ள குறைந்தபட்ச பயண நேரம் 55 நிமிடமாக குறைந்துவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையிலிருந்து சேலத்திற்கு விமான சேவை துவங்கப்பட்டது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது தான். இதில் முதல் பயணியாக கோவா மாநில கவர்னர் மற்றும் நடிகை நமீதா ஆகியோர் வந்தது மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விமான சேவை துவங்கியது குறித்த செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்த இந்த பிரபலங்களின் வருகை மிக முக்கியமானதாக இருந்துள்ளது.


Click it and Unblock the Notifications









