தமிழகம் முழுவதும் பிரஸ், போலீஸ்ன்னு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பிடிக்க போறாங்க! இதுக்கு தான் வெயிட்டிங்!
தனியார் வாகன நம்பர் பிளேட்டுகளில் பிரஸ், போலீஸ், வக்கீல் போன்ற சட்டவிரோதமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதை தமிழகம் முழுவதும் போலீசார் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் வாகனங்களில் பிரஸ், போலீஸ் வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோதமான ஸ்டிக்கர்களை பயன்படுத்தி இயக்கி வந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதத்தை விதித்தார்கள். மேலும் இப்படியான ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனம் ஓட்டக்கூடாது என அறிவுறுத்தினார்கள். இது சென்னை முழுவதும் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் இது போன்ற நடவடிக்கையை தமிழகம் முழுவதும் எடுக்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தரப்பிலிருந்து கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
இவர்கள் அளித்த அறிக்கையில் சில முக்கியமான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி வாகனங்களில் "சன் கன்ட்ரோல் ஃபிலிம்" ஓட்டப்படுவதை தடுப்பதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தனியார் வாகனங்களில் மத்திய,மாநில அரசு சின்னங்களை ஸ்டிக்கராக ஒட்டி பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல் கடந்த மே மாதம் மட்டும் சென்னை பகுதியில் சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியதற்காக 6279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ 31.40 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் வாகனங்கள் நம்பர் பிளேட்டுகளில் சட்டவிரோதமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூபாய் 2.57 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான விதிமுறை மீறலில் ஈடுபடுபவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னையில் தனியார் வாகனங்கள் நம்பர் பிளேட்டுகளில் இது போன்ற சட்டவிரோத ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோர்ட் கூறியுள்ளது.

இந்த அறிக்கை தாக்கலான பிறகு இந்த வழக்கில் தமிழக முழுவதும் இது போன்ற நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக உத்தரவிடும் பட்சத்தில் தமிழக முழுவதும் இனி நம்பர் பிளேட்டுகளில் சட்டவிரோத ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
வாகன நம்பர் பிளேட்டுகளில் நம்பரை தவிர வேறு எந்த விதமான எழுத்துக்களும் இருக்கக்கூடாது என மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. நம்பர் பிளேட்டுகள் தெளிவாக தெரியும்படியும் இருக்க வேண்டும் என சொல்கிறது. சிலர் நம்பர் பிளேட்டில் உள்ள நம்பர்களை மிக வித்தியாசமான கோணத்தில் தெளிவாக புரியும் படி இல்லாமல் அச்சிடுகிறார்கள். இதுவும் சட்டப்படி தவறான விஷயமாகும்.
இப்படியாக தமிழகம் முழுவதும் போலீசார் சட்டவிரோதமான ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஏகப்பட்ட வாகனங்கள் இதில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏகப்பட்ட அபராத தொகையும் வசூலிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் இப்படியான சட்டவிரோத ஸ்டிக்கர்களை உங்கள் வாகனங்களில் பொருத்திருந்து தற்போதைய நீக்கி விடுவது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் நம்பர் பிளேட் பகுதியில் உங்கள் வாகனத்தின் நம்பர் தவிர வேறு எந்த விதமான எழுத்துக்களையும் ஸ்டிக்கராக ஒட்டக்கூடாது. அதே நேரம் வாகனத்தின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற போலீஸ், பிரஸ் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு அனுமதி கிடையாது. இப்படியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனத்தை நீங்கள் பயன்படுத்தினால் உடனடியாக அதை மாற்றி விடுங்கள்.


Click it and Unblock the Notifications









