சென்னையில 6 மணிக்கு காபி குடிச்சுட்டு, 8 மணிக்கு டிபன் சாப்பிட பெங்களூரு போயிரலாம்! புது செமி-ஹை ரயில் வருது!
சென்னை- பெங்களூரு இடையே புதிய அதிவேக ரயில் பாதையைக் கட்டமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னை - பெங்களூரு இடையே வெறும் 2 மணி நேரத்தில் பயணிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
சென்னை மற்றும் பெங்களூரு தென்னிந்தியாவின் மிக முக்கியமான நகரமாக இருக்கிறது. இந்த இரு நகரங்களையும் இடையே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த இரு நகரங்களையும் இணைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. இரு பெரு நகரங்களை இணைப்பது மூலம் இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும்.

இந்நிலையில் தற்போது சென்னையிலிருந்து பெங்களூரு இடையே 350 கி.மீ தூரம் இருக்கிறது. இந்த தூரத்தைக் கடக்க தற்போது வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக 4.5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. மற்ற சாதாரண ரயில்கள் 6.5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. இது அதிகமான நேரம் இன்னும் விரைவான பயணத்தை ஏற்படுத்த என்ன செய்யலாம் என ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில் சென்னை-பெங்களூருவை இணைக்கும் படி புதிய ரயில் பாதை ஒன்றைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ரயில் பாதையில் புதிதாக ஒரு தண்டவாளத்தைச் சென்னை - பெங்களூரு அதிவேக ரயிலுக்காக மட்டும் கட்டமைக்கலாம் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ரயில் தண்டவாளம் செமி-ஹை ரயில்களை இயக்கும் பிராடு கேஜ் பாதைகளாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாதையைக் கட்டமைப்பதற்காக ரூ8.3 கோடியைச் செலவிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த பாதை இந்தாண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கலாம். இந்த பாதையில் ரயில்கள் அதிகபட்சம் 200 கி.மீ வேகத்தில் ரயில்களால் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையிலிருந்து கிளம்பிய ரயில் பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளி பகுதிக்கு வெறும் 2 மணி நேரம் 15 நிமிடத்தில் சென்று விட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் 350 கி.மீ தூரம் அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. பையப்பனஹள்ளி ரயில் நிலையம் அருகே பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது.

பையப்பனஹள்ளியிலிருந்து பெங்களூரு நகருக்குள் பயணிப்பவர்கள் மெட்ரோவை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த புதிய பாதையில் திட்டமிடப்பட்டுள்ள ரயில் குறித்த விபரமும் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலும் வந்தே பாரத் ரயில்தான் இயக்கப்படும். அந்த ரயில் தான் முழுமையாக ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரயிலாக இருக்கிறது.
இந்த ரயில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும் அதில் 2 பெட்டிகள் எக்ஸிக்கியூட்டிவ் கிளாஸ் பெட்டிகளாக இருக்கும். இது ரயில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுப் பயணிக்கும் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது போக அதி வேக ரயில் இந்தியாவிலேயே இதுவரை கிடையாது. இந்த பாதை அதற்காகக் கட்டமைக்கப்பட்டால் இந்தியாவில் இதுவே முதன் முறையாக இருக்கும்.
விமானத்தில் கூட சென்னை- பெங்களூரு பயண நேரம் 50 நிமிடமாக இருந்தாலும் விமான நிலையத்தில் செக்கிங், போர்டிங், டீபோர்டிங், செக்கவுட் என மொத்தம் குறைந்தது 3 மணி நேரமாவது எடுத்துக்கொள்ளும். மேலும் பெங்களூரு விமான நிலையம் அதிக தொலைவில் இருப்பதால் பெங்களூரு நகருக்குள் வர 1 மணி நேரம் ஆகும். அப்படிக் கணக்கிட்டால் 4 மணி நேரம் ஆகிவிடும். ஆனால் இந்த ரயிலில் வெறும் 2 மணிநேர பயணம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் அதி வேக ரயில்கள் நிச்சயம் தேவை, வந்தேபாரத் போன்ற ரயிலை இந்தியாவிலேயே கட்டமைத்த நாம் அதன் முழு திறனைப் பயன்படுத்தும் பாதைகளையும் கட்டமைக்க வேண்டும். பெங்களூரு- சென்னை போன்ற நகரங்களை இணைப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பலனைத் தரும்.


Click it and Unblock the Notifications









