போட்றா வெடிய! சென்னைக்கு வருகிறது வாட்டர் மெட்ரோ! ரோட்ல இனி டிராஃபிக்கே இருக்காது!
இந்திய சாலைகள் தற்போது வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அங்கெல்லாம் வசிப்பவர்களின் மிக முக்கியமான பிரச்னையே போக்குவரத்து நெரிசல்தான். பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, ஊரையே காலி செய்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
இத்தனைக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, பெரு நகரங்களின் சாலைகளில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை பெரிதாக குறையவில்லை. சாலைகளில் அளவுக்கு அதிகமாக பயணம் செய்யும் வாகனங்களால், ஒலி மற்றும் காற்று மாசுபாடு பிரச்னையும் கூட ஏற்படுகிறது.

எனவே சாலைகளில், வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க தற்போது அதிரடியான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் (Chennai) அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய திட்டம் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.
இந்தியாவில் தற்போது வாட்டர் மெட்ரோ (Water Metro) திட்டம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த வசதியை பெற்ற இந்தியாவின் முதல் நகரம் கேரள மாநிலம் கொச்சி (Kochi) ஆகும். இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை சென்னையிலும் அமலுக்கு கொண்டு வருவது தொடர்பாக தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஓரளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகனங்கள் மூலமாக சாலைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான போக்குவரத்து உடன் ஒப்பிடும்போது, வாட்டர் மெட்ரோ திட்டம் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
எனவே சென்னையில் ஒலி மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்துவதற்கும் இந்த திட்டம் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெரீனா பீச், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சென்னையின் மிக முக்கியமான பேருந்து நிலையங்களை எல்லாம் இணைக்கும் வகையில் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
இந்த திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ளதாக நியூஸ் 18 தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், நீர்வள ஆதார துறை, சென்னை மாநகராட்சி மற்றும் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் அமலுக்கு வந்தால், அது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில் போக்குவரத்து நெரிசல், ஒலி மற்றும் காற்று மாசுபாடு என ஏராளமான பிரச்னைகளை குறைப்பதற்கு வாட்டர் மெட்ரோ திட்டம் உதவி செய்யும்.
ஆனால் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும்? என்பது போன்ற தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தற்போது இந்த திட்டம் ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, கட்டணத்தை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். கட்டணம் குறைவாக இருந்தால் மட்டுமே, பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








