சென்னையில் அரங்கேறிய ரயில் ஹைஜேக் முதல் ஒடிசா ரயில் விபத்து வரை! எப்பா இந்தியால இத்தன ரயில் விபத்தாகியிருக்கா!
நாட்டையே பேரதிர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று மாலை ஒடிசா ரயில் விபத்து சம்பவம் அரங்கேறியது. விபத்து அரங்கேறி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. இருப்பினும் அதனால் ஏற்பட்ட அதிர்வலைகள் நாட்டில் சிறிதளவும் குறைந்ததாக தெரியவில்லை.
ஒரே நேரத்தில் 300 வரையிலான உயிர்களை காவு வாங்கியதனால் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து பார்க்கப்படுகின்றது. உயிர் பலியை மட்டும் இந்த ரயில் விபத்து அதிகளவில் வாங்கவில்லை, அதிக எண்ணிக்கையிலான பயணிகளை மிக மோசமான காயங்களுக்கும் இந்த ரயில் விபத்து ஆளாக்கி இருக்கின்றது.

புள்ளி விபரங்கள் ஆயிரக் கணக்கான பயணிகள் இந்த விபத்தில் காயங்களுக்கு ஆளாகியதாக தெரிவிக்கின்றன. இத்தகைய மிக மோசமான விபத்து என்பதனாலேயே இந்த பேரழிவை விட்டு பலரின் மனம் வெளியில் வராமல் அதனுள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றது. ஒடிசா ரயில் விபத்து மட்டுமே இந்தியாவில் அரங்கேறிய மிகப் பெரிய ரயில் விபத்தல்ல என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு முன்பாகவும் இதுபோல மிக மோசமான ரயில் விபத்து சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. அவற்றில் சிலவற்றையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஒடிசா ரயில் விபத்தை போலவே மிக மோசமானதாகக் கருதப்படும் ரயில் விபத்துகள் சிலவற்றை பற்றிய தகவலையே காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பீஹார் ரயில் விபத்து: இந்தியாவின் மிக மிக மோசமான ரயில் விபத்து என இதனைக் கூறலாம். ஒடிசாவைக் காட்டிலும் மிக அதிகளவில் உயிர் பலியைக் கொண்ட ரயில் விபத்து இதுவாகும். ஒடிசா மட்டுமில்லைங்க இதுவரை அரங்கேறியதுலையே மிக மோசமான மற்றும் அதிக உயிர்களைப் பலிக் கொண்ட ரயில் விபத்து இதுவாகும்.
ஆரம்பத்தில் 500 மட்டுமே என கூறப்பட்ட பலி எண்ணிக்கை பின்னர் 800 வரை தொட்டது. இந்த சம்பவம் 6 ஜூன் 1981 இல் அரங்கேறியது. பீஹாரின் சஹர்ஷா எனும் பகுதியிலே இந்த ரயில் விபத்து அரங்கேறியது. ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதனாலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியது.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் பல பாகமதி ஆற்றில் மூழ்கின. இதனாலேயே உயிர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து 800ஐ தொட்டது. ரயில் தடம் புரண்டதற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை. ஒரு சிலர் திடீர் சூறாவளியையும், ஒரு சிலர் ரயில் வேகமாக வந்து பிரேக் பிடித்ததுமே அது தடம் புரண்டதற்கான காரணம் என கூறுகின்றனர்.

புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: கடந்த 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி அன்று அரங்கேறிய இந்த ரயில் விபத்தையும் யாருமே மறக்க மாட்டார்கள். நின்றுக் கொண்டிருந்த இந்த ரயில் மீது களிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து மோதியது. இந்த விபத்தினால் இரு ரயில்களிலும் உயிர் சேதம் ஏற்பட்டது.
சுமார் 360க்கும் அதிகமான பயணிகள் இந்த ரயில் விபத்தில் இறந்தனர். உபி மாநிலம், ஃபிரோசாபாத் அருகே ரயில் நின்றுக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியது. ஒரு சிலர் இந்த விபத்து அரங்கேறுவதற்கு முழுக்க முழுக்க மனித தவறே காரணம் தெரிவித்தனர்.
ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்களோ, களிந்தி எக்ஸ்பிரஸ் முதலில் விலங்கின் ஒன்றின்மீது மோதியது. இதனால், அந்த ரயிலின் பிரேக்கிங் சிஸ்டம் செயலற்று போனது. இதன் பின் விளைவே இந்த அளவு மிக மோசமான ரயில் விபத்து களிந்தி எக்ஸ்பிரஸால் அரங்கேறியது என தெரிவிக்கின்றது.
ஏற்கனவே புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் அந்த தடத்தில் நின்றுக் கொண்டிருந்த நிலையிலேயே களிந்தி எக்ஸ்பிரஸுக்கும் அதே தண்டவாளத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே புருஷோத்தம் எக்ஸ்பிரஸின் பின்பகுதியில் அதிக வேத்தில் வந்து களிந்தி எக்ஸ்பிரஸ் மோதி இருக்கின்றது. இதன் பின் விளைவு அதிக உயிர்கள் பலியாகின. ஆகையால், இப்போதும் இந்த நிகழ்வு மறக்க முடியாத ரயில் விபத்தாக உள்ளது.

அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரமபுத்ரா மெயில் விபத்து: இந்த ரயில் விபத்தில் சுமார் 268-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகின. மேலும், 359க்கும் அதிகமானோர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர். 1999லேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியது. இந்த இரு ரயில்களில் ஒன்றில் அதிகளவில் ராணுவ வீரர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பிரமபுத்திரா மெயிலிலேயே ராணுவ வீரர்கள் அசாமில் இருந்து நாட்டின் எல்லை பகுதிக்கு அழைத்துச் செல்லப்படனர். இந்த நிலையிலேயே அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரமபுத்திரா ரயில் மோதலைச் சந்தித்தன. இந்த விபத்து சம்பவம் சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் அரங்கேறியிருக்கின்றது.
இதற்கு சிக்னல் பிரச்னையே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. அதிக வேகத்தில் வந்து பிரமபுத்திரா மெயிலுடன் அவத் அசாம் ரயில் மோதியனால் அந்த ரயிலின் எஞ்ஜின் காற்றில் தூக்கி வீசப்பட்டு இருக்கின்றது. இத்துடன் அருகில் இருந்து வீடுகள் மீதும் அந்த ரயில் மோதியிருக்கின்றது. இத்தகைய மிக மோசமான விபத்தே அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரமபுத்ரா மெயில் விபத்தாகும்.

பாம்பன் பாலம் ரயில் விபத்து: ராமேஷ்வரம் பாம்பன் பாலத்திலும் மிக மோசமான ரயில் விபத்து அரங்கேறி இருக்கின்றது. தனுஷ்கோடி பயணிகள் ரயில் பாம்பன் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென சூறைக்காற்று ஏற்பட்டு ரயிலை கடலுக்குள் தள்ளியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் குறைந்தபட்சம் 126 பேர் இறந்திருப்பர். தமிழகத்தில் அரங்கேறிய மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று இதுவாகும். 1964 ஆம் ஆண்டிலேயே இந்த ரயில் விபத்து அரங்கேறியது.
சென்னை ரயில் ஹைஜேக் சம்பவம்: தமிழகத்தில் ஓர் ரயில் ஹைஜேக் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று அதிகாலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலை ஹைஜேக் செய்த மர்ம நபர், அதனை அதிக வேகத்தில் எடுத்து வந்து கூட்ஸ் ரயில் மீது மோத செய்தார்.
அதிர்ஷ்டவசமாக புறநகர் பயணிகள் ரயிலில் பயணிகள் யாரும் பயணிக்காத காரணத்தினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், அந்த ரயிலை ஹைஜேக் செய்து வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுபோன்று இந்தியாவில் பல்வேறு ரயில் சார்ந்த விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதில் சென்னை வியாசார்பாடியில் அரங்கேறிய ஹைஜேக் ரயில் விபத்து சம்பவம் திரைப்படங்களையே விஞ்சும் வகையில் அமைந்தது. மேலும், ஒட்டுமொத்த இந்தியாவையும் அது அதிர வைக்கும் வகையில் அமைந்தது.
இதுதவிர, 1998ல் ஜம்மு தவி-சீல்டா எக்ஸ்பிரஸ் மற்றும் ஃபிரண்டியர் கோல்டன் டெம்பிள் மெயில் மோதல் (உயிர் பலி 212), 2002 இல் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து (உயிர் பலி 140), 2010 ஜனேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து (உயிர் பலி148) மற்றும் 2016 இல் புக்ரயான் ரயில் விபத்து (உயிர் பலி 152) என பலதரப்பட்ட ரயில் விபத்துகள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன. அனைத்தும் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானது என்கிற பார்வையே மக்கள் மத்தியில் உள்ளது. இதனால் மிகப் பெரிய வலையமைப்பைக் கொண்ட மாபெரும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து மாறியிருக்கின்றது. ஆனால், இத்தனை ரயில் விபத்துகளும், இத்தனை உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கின்றது என்பது ரயில் பயணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









