ஓரடகத்தில் புதிய தடுப்பூசி மையம்!! டைம்லர் தொழிற்சாலையில் முதல்வர் திறந்து வைத்தார்!
தமிழகத்தில் கடந்த திங்கட் கிழமையில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் வெளியே செல்வதற்கு இ-பாஸ் முறை அமலில் உள்ளது.

வருகிற மே 31ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையும் வரையில் இவ்வாறான ஊரடங்கு உத்தரவுகளே அடுத்தடுத்ததாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமில்லாமல் தடுப்பூசிகளையும் முறையாக செலுத்தி கொள்வது மட்டுமே தற்போதைக்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்களாகும். அரசாங்கங்கள் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி கொள்வதற்கு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அதேநேரம் பொது மக்கள் சிரமமின்றி தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ஏதுவாக கொரோனா தடுப்பூசி மையங்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரகடத்தில் உள்ள டைம்லர் இந்தியா நிறுவனத்தின் கமர்ஷியல் வாகன தொழிற்சாலையில் புதியதாக தடுப்பூசி மையங்களை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு ஊரக கைத்தொழில் அமைச்சர் டி.எம்.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.செல்வ பெருந்தகை தலைமை தாங்கினர். மேலும் இந்த தடுப்பூசி மையத்திற்கு அரசு அதிகாரிகளும், டைம்லர் இந்தியா கமர்ஷியல் வாகன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யகம் ஆர்யாவும் வருகை தந்திருந்தனர்.
டைம்லர் நிறுவனத்தின் ஒரகடம் தொழிற்சாலையில் பணிப்புரியும் 18- 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் இருந்து தமிழ்நாடு வாகன தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் 44 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசியை வழங்க தமிழ்நாடு அரசு ஆரம்பித்திருப்பது தெரிய வருகிறது.
டைம்லர் நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமின்றி இந்த தடுப்பூசி மையத்தில் மற்ற உள்ளூர்வாசிகளும் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு நாளைக்கு 250 பேர் தடுப்பூசியை செலுத்தும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மையம் ஞாயிற்று கிழமையை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் வரையில் தொழிற்சாலையை இவ்வாறு தடுப்பூசி மையமாக செயல்பட அனுமதிக்க உள்ளதாக டைம்லர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மையம் தனியார் மற்றும் அரசு சுகாதார பணியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் கோ-வின் தளமான www.cowin.gov.in-இல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள உள்ளோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கு 18 வயதை கடந்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தடுப்பூசிகளை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்திற்கு டைம்லர் உதவியாக இருந்து வருகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் கூட இந்தியா முழுவதும் கோவிட்-19 தடுப்பூசிகளை கொண்டு செல்ல சிறப்பு ரீஃபர் லாரி ஒன்றை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.


Click it and Unblock the Notifications








