மனிதன் உருவாக்கிய அதிசயம்... இந்தியாவில் என்று எத்தனை பேர் நினைத்தீர்கள்? மொத்தம் ஆன செலவு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவும், சீனாவும் தான் எதிர்காலத்தில் இரு பெரும் பேரரசுகளாக விளங்க வாய்ப்புள்ளதாக உலகின் பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அத்தகைய நிலையை அடைய இந்தியாவிற்கு இன்னும் சில காலம் ஆகும் என்றாலும், சீனா அந்த நிலையை ஏற்கனவே எட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு சாட்சியாக உலகமே வியக்கும் வகையில், மலைகளுக்கு இடையே மிக உயரத்தில் மேம்பாலத்தை அமைத்து சீனா சாதனை படைத்தது. 2016ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இந்த மேம்பாலத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
உள்கட்டமைப்பு வசதிகளில் உலகின் மற்ற நாடுகளுக்கு சீனா முன்னுதாரணமாக உள்ளது. அதேநேரம், இந்தியாவை போன்று இயற்கை வளங்களிலும் சீனா செழித்துள்ளது. நாட்டை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை கொண்டுவந்தாலும், அவை நாட்டின் இயற்கை வளங்களை எந்த விதத்திலும் சேதப்படுத்திவிட கூடாது என்பதில் எப்போதுமே சீன அரசாங்கம் உறுதியாக உள்ளது.

அந்த வகையில், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள பரந்துவிரிந்த மலைத்தொடர்களுக்கு மத்தியில் ஒரு புதிய மேம்பாலத்தை எந்தவொரு வன உயிரினத்திற்கும் தீங்கு ஏற்படுத்தாத வகையில் சீன அரசு கட்டி முடித்தது. பெய்பான்ஜியாங் என அழைக்கப்படும் இந்த மேம்பாலம் ஆனது மோட்டார் வாகனங்கள் இயங்கக்கூடிய வகையில் உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலம் ஆகும்.
அதாவது அந்த அளவிற்கு சுமார் 1,854 அடி (565 மீட்டர்கள் - தரையில் இருந்து அரை கிமீ-க்கும் அதிகம்) உயரத்தில் பெய்பான்ஜியாங் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், சில சமயங்களில் மேகங்களுக்கும் மேல் அந்தரத்தில் தொங்குவது போன்ற காட்சியை இந்த பாலம் கொடுக்கிறது. அந்த சமயத்தில் பாலத்தின் மேல் நின்று எடுக்கப்பட்ட போட்டோக்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளன.
சீனாவின் யுனான் மற்றும் குசோவு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்ட பெய்பான்ஜியாங் பாலம் 2016ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 3.5 வருடங்களாகியது. ஏனெனில், அந்த அளவுக்கு சீனாவின் கடினமான மலைத்தொடர்களுக்கு இடையே இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இவ்வாறான பகுதியில், அதிக உயரத்தில் பாலம் அமைக்கப்படுவதால், காற்று முக்கியமான பாதகமாக இருக்கும்.
இதனால், வழக்கமான மேம்பாலத்தை காட்டிலும் இந்த பாலத்தை கூடுதல் கவனத்துடன் வடிவமைத்தனர். இந்த மேம்பாலத்தினால் பயண நேரம் பல மணிநேரங்கள் குறைந்துள்ளதாம். உயரத்தில் மட்டுமில்லாமல், நீளத்திலும் பெய்பான்ஜியாங் பிரம்மாண்டமான பாலம் ஆகும். இந்த பாலத்தின் நீளம் 1,341 மீட்டர்கள், அதாவது 1.34 கிமீ ஆகும். அந்தரத்தில் தொங்கும் பாலத்தின் மையப்பகுதி மட்டும் 720 மீட்டர்கள் நீளத்தில் உள்ளது.
வாகனங்களின் அதிர்வுகளை தாங்கிக் கொண்டு, எளிதில் சேதமாகாத வகையில் டிரஸ் கர்டர் எனப்படும் ஜிக்-ஜாக்கான பேட்டர்னில் தரைப்பகுதியை கொண்ட இரும்பு கேபிள் மேம்பாலம் இதுவாகும். உலகளவில் உள்ள இந்த வகை மேம்பாலங்களில் உலகின் 2வது மிக நீளமானது இந்த பெய்பான்ஜியாங் மேம்பாலம் ஆகும். இரும்பு, கான்க்ரீட் மற்றும் கேபிள்களின் உதவியுடன் இந்த பாலத்தை கட்டியெழுப்பி உள்ளனர்.
இந்த பாலத்தை அமைக்க மொத்தம் 14.4 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,207 கோடி) சீன அரசு செலவு செய்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த மேம்பாலத்தின் பிரம்மாண்டத்தை போல இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியும் சீன அரசுக்கு மிகுந்த சவாலாக இருந்தது. ஏனெனில், 3.5 வருடங்களாக பாலத்தை அமைக்க தேவையான பொருட்களை கொண்டுவருவது இவ்வாறான மலைகளுக்கு இடையே மிகவும் சவாலான காரியம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவின் 85% மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் வாழ்கின்றனர். ஆக, சீனாவின் நிறைய இடங்கள் இன்னமும் மனிதர்களே செல்ல முடியாத வகையில் கரடு முரடான பாறைகளாலும், அடர்ந்த காடுகளாலும் நிரம்பியுள்ளன. அவ்வாறான, நாட்டின் முக்கிய பகுதிகளில் இருந்து மிக தொலைவில் தென்கோடியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இந்த மேம்பாலத்தை சீன அரசு நிறுவியுள்ளது. ஆகையால், பெய்பான்ஜியாங் ஆனது மனிதனின் செயல்திறனுக்கு மற்றொரு சான்றாகும்.


Click it and Unblock the Notifications








