டிரைவரில்லாமல் இயங்கும் உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!
டிரைவரில்லாமல் உலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக நீளமான புல்லட் ரயில் வழித்தட கட்டமைப்பை சீனா பெற்றிருக்கிறது. அங்கு மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் வரை புல்லட் ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் பீஜிங்கில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் புல்லட் ரயில் கட்டமைப்பு மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது சீன ரயில்வேத் துறை. ஆம், உலகிலேயே முதல்முறையாக டிரைவரில்லாமல் இயங்கும் புல்லட் ரயில் சேவையை அந்நாட்டு ரயில்வேத் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் சேவை பயன்பாட்டில் உள்ளது. அவற்றின் வேகம் குறைவு. ஆனால், சீனாவின் டிரைவர்லெஸ் புல்லட் ரயில் 350 கிமீ வேகம் வரை பயணிக்கும்.

சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து ஜான்ஜியாகோ நகருக்கு இந்த புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இரு நகரங்களிலும், இந்த புல்லட் ரயில் செல்லும் வழித்தடத்தில் உள்ள நகரங்களில் வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இதனை மனதில் வைத்தே இந்த புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பீஜிங் - ஜான்ஜியாகோ நகரங்களுக்கு இடையில் மூன்றரை மணிநேரமாக இருந்த பயண நேரம் இந்த புதிய புல்லட் ரயில் சேவை மூலமாக வெறும் 47 நிமிடங்களாக குறைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் டிரைவரில்லாமல் இயங்கும் புல்லட் ரயில்கள் மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கின்றன. ரயில் நிலையங்களில் வேகத்தை குறைத்து நிற்பது, புறப்படுவது, வேகத்தை தானியங்கி முறையில் சரி செய்யும் தொழில்நுட்பங்களை இந்த புல்லட் ரயில்கள் பெற்றுள்ளன.

இதற்காக, இந்த ரயிலில் 2,500 சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏதேனும், தடை அல்லது தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டால் தானியங்கி முறையில் ரயிலை நிறுத்துவதற்கான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. எனினும், அவசர சமயத்தில் ரயிலை கட்டுப்படுத்துவதற்காக ஓட்டுனர் ஒருவரும் பணியில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

டிரைவரில்லா புல்லட் ரயில்களில் பயணிகளின் வசதிக்காகவும் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அதிக அளவில் பயணிக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த ரயில்களில் விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு உபகரணங்களை வைப்பதற்கான இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, 5ஜி இன்டர்நெட் வசதி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் விளக்குகள், தொடுதிரை கட்டுப்பாட்டு பட்டன்கள், வயர்லெஸ் சார்ஜர்கள் என மிக அசத்தலான வசதிகளை இந்த புல்லட் ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த வசதிகளுக்காக கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி முதல் 22ந் தேதி வரை அந்நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாகவே இந்த டிரைவரில்லாமல் இயங்கும் புல்லட் ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்கனவே, தண்டவாளத்தின் மேல் காந்த விசை துணையுடன் சக்கரங்கள் இல்லாமல் அதிவேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில் கட்டமைப்பையும் சீனா பெற்றிருக்கிறது. அடுத்து வணிக ரீதியிலான விமானங்களுக்கு இணையாக மணிக்கு 600 முதல் 800 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: News China


Click it and Unblock the Notifications