350 கிமீ வேகத்தில் செல்லும் 'டிரைவர்லெஸ்' புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தும் சீனா!
ஓட்டுனர் இல்லாமல் செல்லும் புல்லட் ரயிலை சீனா விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் டிரைவர்லெஸ் புல்லட் ரயிலை சீனா விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் சீனா உலகின் முன்மாதிரி நாடாக விளங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய புல்லட் ரயில் பாதையை பெற்றிருக்கும் நாடு என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் அடுத்த கடத்திற்கு செல்கிறது சீனா.

ஆம். ஓட்டுனர் இல்லாமல் செல்லும் புல்லட் ரயிலை சீனா விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஓட்டுனர் இயக்குவதைவிட மிக துல்லியமான நேரத்தில் இரு நகரங்களை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் இல்லா புல்லட் ரயில்கள் சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சான்ஜியாகோ ரயில் நிலையங்களுக்கு இடையில் சேவைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வரும் 2022ம் ஆண்டு சான்ஜியாகோ நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. அதற்காக, அமைக்கப்படும் புதிய புல்லட் ரயில் வழித்தடத்தில்தான் இந்த தானியங்கி புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

தலைநகர் பீஜிங்கிலிருந்து சான்ஜியாகோவுக்கு காரில் செல்வதற்கு 3.5 மணிநேரம் பிடிக்கும். ஆனால், இந்த புதிதாக அமைக்கப்படும் புல்லட் ரயில் தடம் மூலமாக 50 நிமிடங்களில் சென்றுவிடலாம். இதனால், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வரும் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் எளிதில் சென்றடையும் வாய்ப்பு கிட்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த ஓட்டுனர் இல்லா புல்லட் ரயில்களில் கண்காணிப்புக்காக ஓட்டுனர் ஒருவர் பணியில் இருப்பார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதுபோன்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், முழுமையாக ஓட்டுனர் இல்லாமல் செல்லும் விதத்தில் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு பீஜிங் - ஷென்யாங் ரயில் நிலையங்களுக்கு இடையில் வைத்து இந்த ஓட்டுனர் இல்லா புல்லட் ரயில்கள் 94 நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதில், எந்த பிரச்னையும் இல்லாமல் துல்லியமாக சென்றதையடுத்து, விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சீன ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

உடல் சோர்வு, மனநிலை மற்றும் மாரடைப்பு போன்ற காரணங்களால் ஓட்டுனர்கள் ரயிலை இயக்கும்போது விபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது. மேலும், நேர மேலாண்மையிலும் பிரச்னை ஏற்படுகிறது. இவற்றை ஆட்டோமேட்டிக் டிரெயின் ஆபரேஷன் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக தவிர்க்க முடியும்.

அத்துடன், குறித்த நேரத்தில் ரயில்கள் மிக துல்லியமாக ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும். இந்த அதிவேக ரயில் சேவை சீனாவின் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதுடன், உலகின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy: Xinhua


Click it and Unblock the Notifications