வெள்ள நீரில் மீனை போல் நீந்தி வந்த எலெக்ட்ரிக் கார்... வீடியோவை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள்
வெள்ள நீரில் மீனை போல் நீந்தி வந்த மின்சார காரின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வருடந்தோறும் கனமழை பெய்யும் மும்பை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். குறிப்பாக கார் உரிமையாளர்கள்தான் ஏராளமான சவால்களை சந்தித்து வருகின்றனர். மழைக்காலங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறி விடும். இப்படி அதிகளவு தண்ணீர் நிரம்பிய சாலைகளில் கார்களை இயக்குவது சவாலான விஷயம்.

அத்துடன் காரிலும் பல்வேறு கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே காரை பழுது நீக்குவதற்கு நீங்கள் அதிக தொகையை செலவு செய்ய நேரிடலாம். வெறும் செலவுடன் நின்று விட்டால் கூட பரவாயில்லை. சில சமயங்களில் இது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மழை வெள்ளத்தில் செல்லும்போது கார் கதவை திறக்க முடியாமல் உள்ளேயே சிக்கி பயணிகள் உயிரிழந்த சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற சவாலை நீங்கள் எதிர்கொண்டவர் என்றால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று உங்களை கண்டிப்பாக ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.

மும்பையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சீனாவிலும் தற்போது பேய்மழை கொட்டி தீர்த்து கொண்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கனமழை காரணமாக தற்போது வரை 55 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனமழையால் சீனாவின் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

அப்படி வெள்ளம் சூழ்ந்த ஒரு சாலையில் டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) கார் ஒன்று, மீனை போன்று நீந்தி வந்துள்ளது. அந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் காட்டுதீயாய் பரவி வருகிறது. இது மின்சார செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மாடல் 3 கார்களை உற்பத்தி செய்து வருகிறது.

டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார்கள் செயல்திறன், சொகுசு, அதிநவீன வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் தலைசிறந்து விளங்குகின்றன. இதனை இந்த டெஸ்லா மாடல் 3 காரும் நிரூபித்துள்ளது. மிக கடுமையாக வெள்ளம் சூழ்ந்த சாலை ஒன்றில், டெஸ்லா மாடல் 3 கார் வருவதை இந்த காணொளியில் காண முடிகிறது.

அந்த கார் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு வெள்ள நீரில் மூழ்கியிருந்தது. எனினும் அந்த இடத்தை வெற்றிகரமாக கடந்து டெஸ்லா மாடல் 3 அசத்தியுள்ளது. காணொளியை பார்க்கும்போது, அந்த காரின் டிரைவர் எந்தவித பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. கடும் வெள்ளம் சூழ்ந்த நிலையிலும், அந்த இடத்தை பூப்போல் மென்மையாகவும், சீராகவும் கடந்து விட்டது டெஸ்லா மாடல் 3.

இந்த காணொளியை பார்த்த மக்கள் சமூக வலை தளங்களில் டெஸ்லா நிறுவனத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். டெஸ்லா மாடல் 3 காரின் செயல்திறனை பார்த்து வியந்து போன ஒரு பயனர், துரதிருஷ்டவசமாக நான் வசிக்கும் பகுதியில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான். இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் டெஸ்லா இன்னும் வர்த்தகத்தை தொடங்கவில்லை. இது இந்திய மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. டெஸ்லா இந்தியாவில் எப்போது கார் விற்பனையை தொடங்கும் என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியர்களின் இந்த விருப்பம் கூடிய விரைவில் நிறைவேறலாம்.

டெஸ்லா மாடல் 3 மின்சார கார் வெள்ள நீரில் மீனை போல நீந்தி வந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம். இந்த செய்தி எழுதப்பட்டு கொண்டிருந்த சமயம் வரை மட்டும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான முறைகள் இந்த காணொளி பார்க்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை டிவிட்டரில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மும்பை போன்ற நகரங்களுக்கு டெஸ்லா மாடல் 3 மின்சார கார் உகந்தது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா எப்போது இந்தியாவிற்கு வரும் என ஏங்கி கிடப்பவர்களின் ஏக்கத்தை இந்த காணொளி இன்னும் அதிகரித்துள்ளது என்றால் மிகையல்ல.


Click it and Unblock the Notifications








