விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...!
அதிவேக புல்லட் ரயில்களை தயாரித்து வரும் சீனா, விமானங்களுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடிய புதிய ரயில் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சீனா, அதிவேகத்தில் செல்லக்கூடிய புதிய ரயில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தற்போது புரோட்டோடைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மாக்லேவ் ரயில், பயணிகள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 373 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனை இந்த ரயில் பெற்றிருக்கின்றது.

மாக்லேவ் ரயில் என்பது, காந்த ஈர்ப்பு விசை மூலம் இயங்கக் கூடிய ரயில்களாகும். இவை சக்கரங்கள் இல்லாமல், வெறும் காந்தவிசை மூலமாக தண்டவாளத்தில் சில மிமீ இடைவெளியில் பயணிக்கும் திறன் பெற்றவை.

இந்த ரகத்திலான ரயிலைதான் சீனாவின் ரயில்வே ரோல்லிங் ஸ்டோக் கார்பரேஷன் (சிஆர்ஆர்சி) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது அந்த நாட்டின் ரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனமாகும். தற்போது இந்த ரயிலுக்கான சோதனையோட்டம் நடைபெற்று வருகிறது. ஆகையால், இது வருகின்ற 2021ம் ஆண்டில்தான் மக்கள் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

600கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பயணிகள் ரயிலை, பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில், இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த ரயில் முழுமையான வேகத்தில் பயணிக்கும் பட்சத்தில் வெறும் மூன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே அதன் இலக்கை அடைந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த சிஆர்ஆர்சி துணை தலைமை பொறியாளர் டிங் சான்சான் கூறுகையில், "புதிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் மாக்லேவ் ரயிலின் வேகமானது, ஓர் விமானத்தின் வேகத்திற்கு இணையான உந்து விசையைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

சாதாரணமாக விமானங்கள் மணிக்கு 880கிமீ முதல் 926கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கின்றன. அந்தவகையில், புதிய மாக்லேவ் ரயிலின் ஏரோடைனமிக்ஸ் டிசைனானது, இதுபோன்ற வேகத்தை எளிதில் தொடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, புதிய மாக்லேவ் ரயிலின் முகப்பு பகுதியானது, கூர்மையானதாக, காற்றைக் கிழித்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக தயாரிக்கப்பட்ட ரயிலின் ஏரோடைனமிக் அமைப்பைக் காட்டிலும், சற்று கூடுதல் சிறப்பான அமைப்பாக இருக்கின்றது.

அதேசமயம், இந்த ரயில் நிலையான காந்த விசையுடயன் கூடிய தொடர்பை தண்டவாளங்களுடன் பெற்றவாறு பயணிக்கிறது. இதனால், அதிவேகத்தின்போது ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் தவிர்க்கப்படுகிறது.

முன்மாதிரியான மாடலாக உருவாகியிருக்கும் இந்த புதிய மாக்லேவ் ரயில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட சொகுசு நிறைந்த ரயிலாக உருவாக இருக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த ரயிலை சீனா அண்மையில் பத்திரிக்கையாளர்கள் பார்வைக்காக வைத்திருந்தது.
மேலும், இந்த ரயிலின் பயன்பாட்டிற்காக சிறப்பு தண்டவாளங்கள் நிறுவ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற ரயிலை தயாரிப்பது சீனாவிற்கு இது முதல் முறையல்ல முன்னதாக இதேபோன்று, உலகின் அதிவேகமான ரயில்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், முன்னதாக மணிக்கு 431கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை ஷாங்காய் ஏர்போர்டில் இருந்து சிட்டி சென்டர் வரை இணைக்கும் வகையில் பயன்படுத்தி வருகிறது.
இதேபோன்ற மாக்லேவ் ரயிலை ஜப்பானும் அண்மையில் சோதனையோட்டம் செய்திருந்தது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 603கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது தற்போது சோதனையோட்டத்தில் இருக்கும் சீன ரயிலைவிட 3கிமீ வேகம் அதிகம் ஆகும்.


Click it and Unblock the Notifications








