சீனாவில் கட்டப்பட்டிருக்கும் உலகின் சிக்கலான மேம்பால அமைப்பு!
உலகின் மிகவும் சிக்கலான மேம்பால அமைப்பு சீனாவில் கட்டப்பட்டு இருக்கிறது. அதன் படங்களையும், தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.
சென்னைக்கு புதிதாக வருபவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை பார்த்தே குழப்பமடைவதுண்டு. இந்த நிலையில், கத்திப்பாரா போன்று பல அடுக்குகளும், சந்திப்புகளும் கொண்ட உலகின் மிகவும் சிக்கலான சந்திப்புகளை கொண்ட மேம்பாலம் சீனாவில் கட்டப்பட்டு இருக்கிறது.
இப்பவே கண்ண கட்டுதே என்று சொல்ல வைக்கும் வைக்கும் அளவுக்கு பார்க்கும்போதே தலை சுற்ற வைக்கிறது. இந்த மேம்பால அமைப்பு குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து காணலாம்.

சீனாவிலுள்ள சாங்கிங் என்ற இடத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 8 திசைகளில் இருந்து வரும் சாலைகளை இணைக்கும் விதத்தில் இந்த மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு இருக்கிறது.

இந்த மேம்பாலம் 5 அடுக்குகளையும், 20 பாலங்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 31ந் தேதிதான் முடிவடைந்துள்ளது.

'ஹூவாங்ஜூவான் பாஸ்ட என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மேம்பாலம் பார்ப்பதற்கு சிக்கலான அமைப்பை கொண்டிருந்தாலும், பாலத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகளை வைத்து வாகன ஓட்டிகள் எளிதாக கடக்க முடியும் என்று கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை தவறான வழியில் சென்றுவிட்டாலும் வெறும் 600 மீட்டரிலிருந்து ஒரு கிமீ தூரத்திற்குள் சரியான வழித்தடத்தை பிடித்து விட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை பார்த்து குழப்பம் கொள்ள தேவையில்லை என்று கூறி உள்ளனர்.

மற்றொரு முக்கிய விஷயம், இந்த மேம்பாலத்தில் சாட் நவ் நேவிகேஷன் சாதனங்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது சாட் நவ் வழிகாட்டி சாதனங்கள் துல்லியமாக வழி காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், நேவிகேஷன் பொருத்தாத வாகனங்கள் எவ்வாறு இந்த சாலையில் சரியாக செல்ல முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். வழக்கமாக பயணிப்பவர்களுக்கு கூட இந்த சாலை குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இந்த மேம்பால அமைப்பு கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், பயன்பாட்டுக்கு இப்போது திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அங்குள்ள விமான நிலையத்திற்க்கான விரைவு சாலை பணிகள் முடிவடைந்த பின்னரே இந்த மேம்பாலம் திறக்கப்படுமாம். அதாவது, அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் இந்த மேம்பாலம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Photo Credit: Rex


Click it and Unblock the Notifications








