உலகின் அதி-வேக ரயில் சீனாவில் அறிமுகம்! இந்த ஸ்பீடுல போன நம்ம நிலைமை என்ன ஆகுறது!
உள்நாட்டில் வைத்து உருவாக்கப்பட்ட உலகின் அதிவேக ரயிலை சீனா வெளியீடு செய்துள்ளது. இந்த ரயில்குறித்த கூடுதல் சிறப்பு தகவலைக் கீழே காணலாம், வாங்க.

அதி-வேக ரயில் சேவையில் சீனா மற்றுமொரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. உலகின் அதி வேக ரயில் ஒன்றை சீனா வெளியீடு செய்ததன் வாயிலாக புதிய மைல்கல்லை அது எட்டியுள்ளது. மேக்லெவ் (maglev) எனும் பெயரில் புதிய அதிவேக ரயில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இது உச்சபட்சமாக மணிக்கு 600 கிமீ எனும் வேகத்தில் சீறிபாய்ந்து செல்லக் கூடியது. அப்படியானால் இந்த ரயில் மூலம் வெறும் அரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுவிட முடியும். இத்தகைய அதி-வேக சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட பயணிகள் ரயிலையே சீனா செவ்வாய் கிழமை (நேற்று) அன்று வெளியீடு செய்தது.

இதுவே உலகின் அதிவேக தரை வழி வாகனமாகும். இது வழக்கமான ரயில்களைப் போன்று இல்லாமல் காந்த ஈர்ப்பு விசையால் இயங்குகின்றது. இதன் காரணத்தினால்தான் பிற ரயில்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லக் கூடிய ரயிலாக மேக்லெவ் உருவாகியுள்ளது.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மேக்லெவ் ரயிலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரோ-காந்த சக்தி ரயிலை தண்டவாளத்தில் இருந்து குறிப்பிட்ட சில மீட்டர் இடைவெளியில் உயர்த்தி இயங்க செய்யும். ஆகையால், மேக்லெவ்-க்கும், தண்டவாளத்திற்கும் இடையில் தொடர்பு இருக்காது.

எனவேதான் வழக்கமான ரயில்களைக் காட்டிலும் மிக திறமையான ரயிலாக மேக்லெவ் செயல்படுகின்றது. மேலும், மிக சிறந்த பிரேக்கிங், உராய்வு அற்ற இயக்கம் ஆகியவற்றை இந்த ரயில் கொண்டிருக்கின்றது. இத்தகைய திறன் கொண்ட ரயில்கள் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மட்டுமே மின் காந்த விசையால் இயங்கக் கூடிய ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த போக்குவரத்து துறையில் பெரும் சாதனையைப் படைக்கும் வகையிலேயே சீனா மேக்லெவ் ரயிலை உருவாக்கியிருக்கின்றது.

தனது கடலோர நகரமான கிங்டோவில் வைத்தே புதிய மேக்லெவ் ரயிலை உருவாக்கியிருக்கின்றது. சீனா, கடந்த இரு தசாப்தங்களாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது.

இருப்பினும் மிக குறைந்த அளவில், முக்கிய நகரங்களில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றது. அதுவும் விமான நிலையங்களை இணைக்கும் வகையில் மட்டுமே மின்காந்த சக்தி கொண்ட ரயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னும், உள் நகரங்களை இணைக்கும் வகையிலோ, இரு மாகாணங்களை இணைக்கின்ற வகையிலோ இந்த ரயில்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

விரைவில் இரு நகரங்களை இணைக்கும் வகையில் மின்காந்த விசையால் இயங்கக் கூடிய மேக்லெவ் ரயில்களை பயன்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணியிலும் அது களமிறங்கியிருக்கின்றது. ஷாங்காய்-செங்டு இடையில் போக்குவரத்தைக் கொண்டு வர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகையால், மிக விரைவில் சீனாவில் இரு நகரங்களை இணைக்கும் வகையில் மேக்லெப் அதி வேக ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் பயணிகளை சுவாரஷ்யப்படுத்தும் வகையில் ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஒய்-ஃபை இணைய வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Image Courteys: China Xinhua News And China News


Click it and Unblock the Notifications