போக்குவரத்தில் புதுமை: உலகில் முதல் முறையாக தண்டவாளம் இல்லாத பசுமை ரயிலை தயாரித்து சீனா அசத்தல்.!!
உலகிலேயே முதல் முறையாக தண்டவாளம் இல்லாத ரயிலை தயாரித்து அசத்தியுள்ளது சீனா. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
புல்லட் ரயில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மோனோ ரயில், மலை ரயில், டிராம் என ரயில் போக்குவரத்தில் பல வடிவங்கள் இருந்தாலும், அனைத்திற்கும் அடிப்படை தண்டவாளம் மட்டுமே.

சாலை போக்குவரத்துக்கு சாலையே பிரதானம், விமான போக்குவரத்துக்கு ஆகாயமே பிரதானம், கப்பல் போக்குவரத்துக்கு தண்ணீர் பிரதானம்.

இவற்றைப் போல, ரயில் போக்குவரத்திற்கு பிரதானமாக இருப்பது இரும்பு தண்டவாளங்கள் எனப்படும் இருப்புப் பாதைகளே.

தற்போது இந்த வழக்கத்தை மாற்றி ரயில் போக்குவரத்தில் புதுமை படைத்திருக்கிறது சீனா. அதிலும் தண்டவாளமே இல்லாத பசுமை ரயில்களை தயாரித்து வெகு விரைவிலேயே அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவர உள்ளது.

தண்டவாளமில்லாத பசுமை ரயில் போக்குவரத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை 2013லேயே துவக்கிவிட்டது சீன ரயில்வே கார்ப்பரேஷன். தற்போது இவை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

உலகிலேயே முதல் முறையாக இதைப் போன்ற ஒரு ரயிலை உருவாக்கி ஆச்சரியம் அளித்துள்ளது சீனா. தண்டவாளம் இல்லாமலே இயங்கும் இந்த ரயில், மெய்நிகர் கோடுகள் (Virtual) அடிப்படையில் தானியங்கி முறையில் இயங்குகிறது.

இதில் பாதையை கணிக்கும் எண்ணற்ற சென்சார்கள் பொருத்துப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் இரும்பு சக்கரங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் மையப்புள்ளியில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் டயர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த ரயில் இயங்க தண்டவாளங்கள் தேவைப்படாததால் அதற்கான பொருட்செலவு பெருமளவு குறைகிறது. இந்த ரயில் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையையும் சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலின் மொத்த நீளம் 100 அடிகள் ஆகும். இதில் அதிகபட்சமாக 307 பேர் வரை பயணம் செய்யலாம்.

இந்த ரயில் பேட்டரி மூலம் இயங்குகிறது, இதன் மூலம் காற்று மாசு தடுக்கப்படுகிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே இந்த ரயில் 25 கிலோமீட்டர்கள் பயணிக்கிறது.

இது மணிக்கு அதிகபட்சமாக 70 கிலோ மிட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இது குறித்து சீன ரயில்வே கழகத்தின் மூத்த பொறியாளர் ஃபெங் ஜியான்குவா கூறுகையில், சென்சார்கள் மூலம் இந்த ரயில் தன் பாதையை தானே கணித்து செயல்படும் என்றும் பயணப் பாதை குறித்து சென்சார்கள் ரயில் கணிணிக்கு தகவலை அளிக்கும் என்றும் கூறினார்.

இந்த ரயிலின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்க ரயில் பாதை அமைப்பின் உருவாக்க செலவைக் காட்டிலும் இந்த தண்டவாளம் இல்லா ரயில் போக்குவரத்தின் செலவு ஐந்தில் ஒரு பங்கு தான் என்றும் தெரிகிறது.

தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த ரயில் அடுத்த ஆண்டு முதல் சீனாவில் உள்ள ஹுனான் மாகானத்தின் சூசுவா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தண்டவாளம் இல்லாத ரயிலை தயாரித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








