சொந்தமாக விமானம் தயாரித்து பிரம்மிக்க வைத்த விவசாயி! காரணம் தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்...
விவசாயி ஒருவர் சொந்தமாக விமானம் தயாரித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். அவர் விமானம் தயாரித்ததற்கான காரணமும் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
விவசாயி ஒருவர் சொந்தமாக விமானம் தயாரித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். அவர் விமானம் தயாரித்ததற்கான காரணமும் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

வட கிழக்கு சீனாவை சேர்ந்த விவசாயி ஸூ யுவே. இவர் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார். நம்மில் பலருக்கும் இருப்பது போல, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை விவசாயி ஸூ யுவே-வுக்கும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதை ஸூ யுவே-வின் ஆசை என கூறுவதை விட வாழ்நாள் லட்சியம் என்று சொல்வதுதான் மிக பொருத்தமாக இருக்கும். ஆனால் தனது வாழ்நாள் லட்சியத்தை கடந்த வருடம் வரை ஸூ யுவே-வால் எட்ட முடியவில்லை.

இதற்கு ஓர் முக்கிய காரணம் உள்ளது. விமானத்தில் பயணிக்க வேண்டும்தான். ஆனால் அது தனது சொந்த விமானமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஸூ யுவே-வின் உண்மையான லட்சியம். இதனால்தான் கடந்த வருடம் வரை அவரால் தனது வாழ்நாள் லட்சியத்தை அடைய முடியாமல் போனது.

அதற்காக ஸூ யுவே மனம் உடைந்து விடவில்லை. பலரும் ஆச்சரியப்படக்கூடிய வகையிலான ஓர் முடிவை மிகவும் துணிச்சலாக எடுத்தார். அவரது முடிவு பலரது புருவங்களையும் உயர்த்தியது. சொந்தமாக ஓர் விமானத்தை தயாரித்து விடுவது என்பதுதான் அந்த துணிச்சலான முடிவு.

வெறுமனே முடிவு எடுத்ததுடன் மட்டும் ஸூ யுவே நின்று விடவில்லை. உடனடியாக பணிகளை ஆரம்பித்தார். விமானத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன. ஸூ யுவே தயாரித்துள்ள விமானம் அச்சு அசலாக ஏர்பஸ் ஏ320 (Airbus A320) விமானம் போலவே உள்ளது.

விவசாயி ஸூ யுவே பள்ளிப்படிப்பை கூட நிறைவு செய்யாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்று ஸூ யுவே முடிவு செய்த உடனேயே இணைய தளங்களின் வாயிலாக தகவல்களை திரட்ட தொடங்கினார். ஆன்லைன் புகைப்படங்களை சேகரித்து ஆராய்ச்சிகளை செய்தார்.

முன்னதாக சீனாவின் கையுவான் என்ற சிறிய நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் வெல்டிங் பிரிவில் ஒரு முறை ஸூ யுவே வேலை செய்து வந்தார். அங்கு பணியாற்றிய அனுபவம் விமானம் தயாரிக்கும் பணியில் ஸூ யுவே-க்கு உதவியது. இதுதவிர ஸூ யுவே-வின் நண்பர்கள் 5 பேரும் அவருக்கு உதவி செய்தனர்.

விமானத்தின் இன்ஜின், இறக்கைகள், காக்பிட் உள்ளிட்டவற்றுக்காக 60 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெய்லிமெயில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாயை ஸூ யுவே செலவிட்டுள்ளார். இது அனைத்தும் அவரது சேமிப்பில் இருந்த தொகையாகும்.

ஆனால் இந்த விமானம் உடனடியாக பறப்பதற்கு பயன்படுத்தப்படாது என ஸூ யுவே தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விமானத்தை தற்போதைக்கு ஹோட்டல் போன்ற ஓர் அமைப்பாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸூ யுவே மேலும் கூறுகையில், ''எனக்கு நடுத்தர வயது வந்து விட்டது. எனவே என்னால் இனி விமானம் வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன். எனினும் சொந்தமாக ஓர் விமானத்தை நம்மால் தயாரிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். அதன் விளைவுதான் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விமானம்.

எனினும் இதில் ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன. எனவே தற்போது இந்த விமானத்தில் ஹோட்டல் நடத்த முடிவு செய்துள்ளேன். இங்கு உணவு அருந்த வருகை தரும் ஒவ்வொருவருக்கும் அதிபர் போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். எனவே சிவப்பு கம்பளம் விரித்து, அவர்களை உபசரிக்க உள்ளோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications