ஆட்டோ எக்ஸ்போவை காண வந்தவர்கள் மீது தடியடி நடத்திய சிஐஎஸ்எஃப் வீரர்கள்... ஏன் தெரியுமா?
ஆட்டோ எக்ஸ்போவை காண வந்தவர்கள் மீது சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட், நாலேட்ஜ் பார்க் 2-ல் ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழா தற்போது நடந்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிகழ்வுகளில் ஒன்றான ஆட்டோ எக்ஸ்போ 2020, கடந்த பிப்ரவரி 5ம் தேதி (புதன்) தொடங்கியது. இது 15வது எடிசன் ஆகும். ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழா நாளையுடன் (பிப்ரவரி 12) நிறைவடைகிறது.

இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், ஆட்டோ எக்ஸ்போவை காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் பார்வையாளர்களை உள்ளே அனுமதிப்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆட்டோ எக்ஸ்போவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்களின் ஹார்டு காப்பி இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) நடைபெற்றுள்ளது. உள்ளே விட மறுத்ததால், ஆட்டோ எக்ஸ்போவை காண வந்திருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் லத்தி சார்ஜ் நடத்தியதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதில், பலர் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் புக் செய்திருந்தனர். எனவே நுழைவு வாயிலுக்கு வெளியே நீண்ட க்யூ காணப்பட்டது. ஆனால் ஆன்லைன் டிக்கெட்களின் ஹார்டு காப்பி இல்லாதவர்களை உள்ளே விடுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரமடைந்து, வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போதாக்குறைக்கு க்யூஆர் (அ) பார்கோடு ஸ்கேனிங் மெஷினில் வேறு சிறிது நேரம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பார்வையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதால், பாதுகாப்பு அதிகாரிகளால் கேட்கள் மூடப்பட்டு விட்டன. இருந்தபோதும் பலர் கேட்களை முட்டி தள்ளி வலுக்கட்டாயமாக திறக்க முயன்றனர்.

இதனால் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF-Central Industrial Security Force) வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பார்வையாளர்கள் மீது லத்தி சார்ஜ் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள் சில பிரச்னைகளை சந்தித்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் சூழ்நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்' என்றனர். ஆனால் இந்த சம்பவம் காரணமாக பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதில், ஒரு சிலர் ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிப்போம் என சமூக வலை தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








