வெறுத்தே போய்ட்டாரு! மொட்டை மாடியில் கொண்டு போய் கார்களை நிறுத்திய இளைஞர்! நமக்கும் இப்படிதான் நடக்க போகுது!
இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் (Parking) செய்வதற்கான இடவசதியில் மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரு நகரங்களில் மனிதர்கள் வசிப்பதற்கே இடமில்லாத சூழலில், வாகனங்களை எங்கே நிறுத்துவது? என பலரும் குழம்பி போய் கிடக்கின்றனர்.
முன்பெல்லாம் புதிய கார் வாங்கும்போது விலை (Price) எவ்வளவு? மைலேஜ் (Mileage) எவ்வளவு? என்பதைதான் பலரும் பார்ப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் பார்க்கிங் செய்வதற்கு இடவசதி உள்ளதா? என்பதைதான் முக்கியமாக பார்க்கின்றனர். உண்மையில் நம்மில் பலருக்கும் கார் வாங்க வேண்டிய தேவை இருக்கிறது.

பொருளாதார ரீதியில் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் கூட, பார்க்கிங் செய்வதற்கு இடவசதி இல்லாத காரணத்தால், பலர் கார் வாங்கும் திட்டத்தை தள்ளி போட்டு வருகின்றனர். சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்களில் எல்லாம் வீட்டு வாசலிலேயேதான் பலரும் கார்களை பார்க்கிங் செய்து வருகின்றனர்.
தைவான் (Taiwan) போன்ற பகுதிகளிலும் கூட இதே நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு இளம் வயதுடைய சிவில் இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய 2 கார்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். அவை பயன்படுத்தப்படாத கார்கள் ஆகும். எனவே 2 ஆண்டுகளாக கார்கள் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தன.

இதன் காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த சிவில் இன்ஜினியருக்கு அபராதம் விதித்தனர். இதனால் விரக்தியடைந்த அந்த சிவில் இன்ஜினியர் செய்துள்ள சம்பவம் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் நமக்கு ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
ஆம், அந்த சிவில் இன்ஜினியர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 2 கார்களையும் பார்க்கிங் செய்து விட்டார். க்ரேன் உதவியுடன், 2 கார்களையும் தூக்கி, தனது வீட்டின் மொட்டை மாடியில் அந்த சிவில் இன்ஜினியர் நிறுத்தியுள்ளார். இதில் ஒரு கார் மொட்டை மாடியில் நன்றாக பொருந்தி விட்டது. ஆனால் மற்றொரு காரோ, எப்போது கீழே விழுமோ? என்ற ரீதியில் சற்றே தொங்கி கொண்டிருப்பதை போல் இருக்கிறது.
எனவே இது தொடர்பாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த சிவில் இன்ஜினியர், ''நான் சட்டத்தை மீறவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இந்த வீடு, கான்கிரீட் மற்றும் இரும்பு கொண்டு கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே 2 கார்களையும் தாங்க கூடிய திறன் தனது வீட்டிற்கு இருப்பதாக அவர் வாதாடியுள்ளார். ஆனால் அதிகாரிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கம் பக்கத்தினரின் பாதுகாப்பு கருதி, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து 2 கார்களும் அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை நிறுத்துவதில் எவ்வளவு பிரச்னைகள் ஏற்படுகிறது? என்பதை இந்த சம்பவம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது. இனிமேல் வாகனங்களை வாங்குவதற்கு முன்பு, அதை நிறுத்துவதற்கு போதிய இடவசதி உள்ளதா? என்பதையும் பார்த்து கொள்வது உண்மையில் நல்லது. வரும் காலங்களில் பார்க்கிங் தொடர்பாக இந்தியாவிலும் கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








