11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?
11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்துள்ள சூப்பர் கண்ணாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். சாலை விபத்துக்கள் நடைபெற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

லக்னோ மத்திய வழித்தட ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, 20 சதவீத சாலை விபத்துக்களுக்கு சோர்வு (அ) தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதே காரணமாக உள்ளது. எனவே தூக்க கலக்கத்தில் வாகனம் இயக்க வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், டிரைவர்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருந்தபோதும் தூக்க கலக்கம் காரணமாக நடைபெறும் விபத்துக்கள் நடைபெற்று கொண்டேதான் உள்ளன. இந்த சூழலில் இப்பிரச்னைக்கு பள்ளி மாணவர் ஒருவர் அறிவியல் உதவியுடன் தீர்வு கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பிரதியூஷ் சுதாகர். 16 வயதாகும் இவர், கோட்டா சர்வோதயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலான புதிய கண்ணாடியை பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ளார். வாகனம் ஓட்டும்போது இந்த கண்ணாடி டிரைவர்களை தூங்க அனுமதிக்காது. ஆம், உண்மைதான். வாகனம் ஓட்டும்போது நீங்கள் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், நீங்கள் கண்டிப்பாக தூங்க மாட்டீர்கள். அது எப்படி? என்பதை இனி பார்க்கலாம்.

பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள அதிநவீன கண்ணாடியின் இடது பக்கத்தில் இன்ஃப்ராரெட் சென்சார் (Infrared Sensor) வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 எல்இடி பல்புகளும் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக உருவாக்கப்படும் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு, டிரைவரின் கண் இமைகளின் மீது பட்டு பிரதிபலிக்கும்.

அப்போது இக்கதிர்வீச்சை போட்டோடையோடு (Photodiode) 'ரிசீவ்' செய்து சிக்னல் ஒன்றை உருவாக்கும். இதன் விளைவாக உண்டாகும் அதிர்வு, டிரைவரை தூங்க விடாமல் கண் விழிக்க வைத்திருக்கும். எனவே சாலை விபத்துக்களும் தடுக்கப்படும். மாணவன் பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள இந்த கண்ணாடி தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சாலை விபத்து தொடர்பான செய்திகளை படித்த பிறகுதான், இப்படி ஒரு கண்ணாடியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக பிரதியூஷ் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த கண்ணாடியை உருவாக்கும் பணிகளை கடந்த 6 மாதத்தில் முடித்தேன்'' என்றார். பிரதியூஷ் சுதாகருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிரதியூஷ் சுதாகரின் தந்தை பெயர் ஆஷிஸ் சுதாகர். இவர் தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். பிரதியூஷ் சுதாகரின் தாய் பெயர் மம்தா சக்சேனா. இவர் அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








