பிளாட்ஃபார்மில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏற்றி கொலை செய்த +2 மாணவன்..!
பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அதிவேகத்தில் காரை செலுத்தி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்த தகவல்களை காணலாம்.
பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏற்றியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலும், டிரைவிங் தெரியாத 18 வயதிற்கு கீழ் உள்ள மைனர் சிறுவர்களாலும் ஏற்படும் வாகன விபத்துகளில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தான் மோட்டார் விதிகளை மீறுவோர்க்கு கடுமையான அபராதங்கள் விதிக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், நேற்று வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அதிகாலை 5.45 மணியளவில், ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக வந்து பிளாட்ஃபார்மில் தூங்கிக்கொண்டிருந்த நான்கு பேரின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும் அவரச சிகிச்சை பிரிவில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தை ஏற்படுத்தியவன் டெல்லியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில் பயிலும் 18 வயதே ஆன பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் என்ற விபரம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து டெல்லி வடக்கு துணை கமிஷனர் ஜதின் நார்வல் கூறியதாவது, "விபத்தை ஏற்படுத்திய பள்ளி மாணவர் தனது இரண்டு நண்பர்களுடன் காரில் பயணித்துள்ளார்"

"பள்ளி இறுதித் தேர்வுக்காக இவர்கள் புறப்பட்டுச் சென்றதாகவும், வழியில் இவர்களின் நண்பர் ஒருவரின் இல்லத்தின்று சென்றுகொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது" என்றார்.

விபத்தை ஏற்படுத்திய மாணவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார், ஆயினும் காவல்துறையினர் அவனை பிடித்துவிட்டனர், அவரின் இரண்டு நண்பர்கள் விபத்திற்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

மேலும், 5 நாட்களுக்கு முன்னர் தான் இந்த மாணவர் 18 வயதை பூர்த்தி செய்துள்ளதாக காவல்துறையினரின் விசாரைனையில் அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும், அந்த மாணவனின் உண்மையான வயது தொடர்பாக அவனின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டியுள்ளதாகவும் பின்னரே அவர் மைனரா என்ற விவரம் தெரியவரும் என்று காவல் அதிகாரி குறிப்பிட்டார்.

விபத்தை ஏற்படுத்திய மாணவர் உரிய வயதை எட்டாததால் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

விபத்தை ஏற்படுத்திய சமர் என்ற மாணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய கார், விபத்தின் போது சமருடன் உடனிருந்த நண்பர் உஜ்வால் என்ற மாணவரின் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி விபத்தை ஏற்படுத்தும் மைனர் சிறுவர்களின் பெற்றோர்க்கு அபராதமும், சிறைத்தண்டனை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதை அடைந்த பின்னர் ஓட்டுநர் உரிமம் எடுக்கச் சொல்லி பிறகே அவர்களுக்கு வாகனங்களை ஓட்டக் கொடுக்க வேண்டும். அப்போது இதைப் போன்று அப்பாவிகள் பலியாவதை தடுக்க முடியும்.

தமிழகத்தில் ஆடி கார் ஐஸ்வர்யா, நடிகர் அருண்குமார் உள்ளிட்டோர் அதிவேகத்தில் காரில் சென்று விபத்து ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








