எடப்பாடியின் முயற்சியால் தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்! என்னது இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பா?
தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் முயற்சியால் தமிழகத்திற்கு ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் உள்ளிட்ட சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களை மின் ஆட்டோவாக மாற்றும் நிறுவனத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
மேலும், எம் ஆட்டோ நிறுவனம் மூலம் எரிபொருள் வாகனத்தில் இருந்து மின்சார வாகனமாக மாற்றப்பட்ட ஆட்டோக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பயன்பாட்டிற்காக தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொதுவாக நடுத்தர வர்க்க மக்களின் போக்குவரத்தில் முக்கிய பங்கினை ஆட்டோக்கள் வகிக்கின்றன. இவை, பெரும்பாலும் எரிபொருளால் இயங்கும் வாகனங்களாகவே இருக்கின்றன. ஆகையால், சென்னையில் அதிகரித்து வரும் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டில் இவையும் ஓர் முக்கிய பங்காளியாக இருக்கின்றன.
எனவே, அரசின் இந்த முயற்சி வரும் காலங்களில் கணிசமாக மாசுபாட்டினைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்திற்கு முதலீடு ஈட்டும் வகையில் முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கடந்த ஆகஸ்டு மாதம் 28ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை வெளிநாடு சுற்று பயணம் மேற்கொண்டனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தனர்.

இந்த பயணத்தில் ரூ. 8,835 கோடி அளவிலான முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் 35,520 பேருக்கான வேலை வாய்ப்புகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் கேஎம்சி குழுமம் மற்றும் எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய இரு நிறுவனங்களுடன், பெட்ரோல் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் இணைந்து சென்னையில் ரூ. 100 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோக்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த ஆட்டோக்களை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 100 கிமீ தூரம் வரை செல்லலாம். அதற்கேற்ப வகையிலான பேட்டரிகள் அதில் இடம்பெறுகின்றன. இதுபோன்ற ஆட்டோக்களை மாதம் ஒன்றிற்கு 100 என மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4 ஆயிரம் எலெக்ட்ரிக் ரிக்சாக்களை சிட்டி முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆட்டோக்களில் சாதாரண எரிபொருள் ஆட்டோக்களில் இல்லாத வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. அந்தவகையில், சிசிடிவி கேமிரா, பேனிக் பட்டன், ஜிபிஎஸ் மற்றும் டிவி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றது.

இதுபோன்ற மாற்றத்தை எரிபொருள் ஆட்டோக்களில் செய்ய ரூ. 1.2 லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக எம் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, எம் மின்சார ஆட்டோக்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலையங்களை எளிதில் கண்டறியும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








